சொங் பாங் உணவு நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 18) இரவு நிகழ்ந்த சண்டையைப் பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 105ல் நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் 55, 61 வயதுகளில் இருந்த இரு ஆடவர்களுக்கிடையே சண்டை மூண்டதன் தொடர்பில் போலிசுக்கு தகவல் கிடைத்ததாக ஸ்டோம்பின் கேள்விக்கு போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 61 வயது ஆடவர் சுய நினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் பலராலும் பகிரப்பட்டன.
அத்தகைய ஒரு காணொளியில், தரையில் கிடந்த ஒருவரை மற்றவர் தொடர்ந்து மிதிப்பது தெரிந்தது. பின்னர், அந்த ஆடவர் தரையில் அமர்ந்து தனது முகத்தில் வழியும் ரத்தத்தை திசுத் தாள் கொண்டு துடைப்பதையும் காணொளி காட்டியது.
மற்றொரு காணொளியில், ஒரு ஆடவர் (முந்தைய காணொளியில் அடி வாங்கிய நபர்) கையில் மதுப் புட்டியை வைத்திருப்பதையும் அவருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர். சண்டையிட்ட ஒருவரின் காயத்துக்கு துணை மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.