வீட்டின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடி அவற்றை அடமானம் வைத்த பணிப்பெண்ணுக்கு 7 மாத சிறைத் தண்டனை இன்று (ஜனவரி 20) விதிக்கப்பட்டது. நகைகளின் மதிப்பு சுமார் $9,000.
ஒரு டிஃபானி வெள்ளி நெக்லசை தாம் அணிவதற்காக அந்தப் பணிப்பெண் வைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரடெஸ்ஸா கிகாரோ கிரின் எனும் அந்த 45 வயது பணிப்பெண் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிக்கு உட்பட்ட காலகட்டத்தில் 9 வளையல்கள், ஆறு சங்கிலிகள், 4 மோதிரங்கள், ஒரு டிஃபானி வெள்ளி நெக்லஸ் போன்ற தங்க, வெள்ளி நகைகளைத் திருடினார்.
அவற்றின் மொத்த மதிப்பு $9,790. தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அவற்றை அடமானம் வைத்து, சொந்த நாடான பிலிப்பீன்சில் உள்ள தம் குடும்பத்தாருக்கு பணத்தை அனுப்பினார் கிரின்.
வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தின் பூட்டு சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
தங்க நகைகள் வைத்திருந்த பை காலியாக இருப்பதை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி கிரினின் முதலாளி திருவாட்டி ராக்கி கண்டுபிடித்தார்; பின்னர் போலிசில் புகார் அளித்தார்.
கிரினிடம் இருந்த அடமான ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
அவருக்கு 5 மாதத்துக்கு உள்ளாக தண்டனை விதிக்கும்படி அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார். அடமானம் வைத்ததில் கிடைத்த பணத்தை சொந்த ஊரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினரின் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும் பின்னர் நகையைத் திருப்பி அதே பெட்டகத்தில் வைத்துவிட கிரின் திட்டமிட்டதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஆனால், டிஃபானி வெள்ளி நகையை கிரின் அடமானம் வைக்காமல் தன்னுடைய பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடமானம் வைக்கப்பட்ட சில நகைகளை திருவாட்டி ராக்கி தன்னுடைய சொந்த செலவில் மீட்டார். கிரின் அதன் தொடர்பில் பணம் எதுவும் கொடுக்கவில்லை.
நம்பிக்கை மோசடி செய்தது நிரூபணமானதால் அவருக்கு 8 மாத சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
முதலாளியின் வீட்டில் திருடிய குற்றத்துக்கு கிரினுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.