சிங்கப்பூர், ஜகார்த்தா, மேடான் நகரங்களில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் ஆகிய விமானங்களில் பயணம் செய்வோர் புதிய வசதியைப் பெற உள்ளனர். பயணத்திற்கு முந்திய கொவிட்-19 கிருமிப் பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ளவும் அதன் முடிவை அறிந்துகொள்ளவும் இணையவாசல் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் அனைத்துலகப் பயண மீட்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் மேற்கொண்டு இருக்கும் ஆக அண்மைய முயற்சி. கொள்ளைநோயால் நிலைகுத்திப்போன விமானப் பயணத்துறையை மெல்ல மெல்ல மீட்
பதற்கான முயற்சிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
பல வசதிகளை உள்ளடக்கிய புதிய இணையவாசல் நேற்று தொடக்கம் கண்டது. வெற்றிகரமான செயல்பாட்டைப் பொறுத்து அடுத்த சில மாதங்களில் மேலும் பல நகரங்களுக்கும் இதனை சிங்கபூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் கட்டமைப்புகள் விரிவுபடுத்தும்.
விமானப் பயணிகள், பயணத்துக்கு முந்திய கொவிட்-19 பிசிஆர் பரிசோதனை வழங்கப்படும் வசதிகளின் பட்டியலில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு முன்
பதிவு செய்யும் வசதி இணையவாசலில் இருக்கும். பயணத்திற்கு 48 மணி நேரம் முன்னதாகவே அவர்கள் பிசிஆர் பரிசோதனையையும் அது தொடர்பான மற்ற பரிசோதனையையும் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு அதில் வசதி இருக்கும்.
அந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் அதே இணையவாசல் மூலம் 36 மணி நேரங்களுக்குள் பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். விமான நிலையத்தில் பயணத்தை உறுதி செய்யும்போது பரிசோதனை முடிவுகளைக் காட்ட அது எளிதாக இருக்கும்.
விமான நிலைய பயண ஏற்பாட்டு அலுவலர்களும் சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகளும் விரைவுத் தகவல் குறியீடு (க்யூஆர்) மூலம் அந்தப் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து பயண ஒப்புதல் வழங்க இணையவாசல் உதவிபுரியும். இந்த விவரங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது.
பயணிகளின் கொவிட்-19 நிலைமையைக் காட்டும் மின்னிலக்க சுகாதார அட்டையை இணைய வாசலில் சேமித்து வைக்க முடியும். கடந்த டிசம்பர் மாதம் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேற்கொண்டு வரும் மின்னிலக்கச் சுகாதார சரிபார்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.