கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு சிறகை சுதந்திரமாக விரிக்க முடியாமல் தவிக்கும் விமானத் துறைக்கு உதவ நாற்பது மில்லியன் வெள்ளி முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19க்கு பிந்திய காலத்தில் விமானங்களின் பராமரிப்பு பணிகளை மேம்படுத்த அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிதி செலவிடப்படும்.
இதனால் சாங்கி விமான நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிளின் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சிறந்த முறையில் கண்டுபிடிக்கவும் இந்த நிதி பயன் படுத்தப்படும்.
எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனம் இந்த முதலீட்டை நேற்று அறிவித்தது.
தனது ஊழியர்களின் வேலையை எளிதாக்கவும் விரைவாக செய்து முடிக்கவும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் சூழ்நிலையில் விமானங்களின் சேவை குறைவாக இருந்தாலும் பணிகளுக்கான நடைமுறைகளை மேம்படுத்த அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடுத்த கட்டத்தில் பராமரிப்பு ஊழியர்களின் வேலைகளை செம்மையாக்குவதற்கான வழிகள் ஆராயப்படும். பராமரிப்புப் பணிகள் தொடர்பான வெவ்வேறு தரவுகளை கைபேசி செயலில் ஒருங்கிணைப்பது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
முதல் கட்டமாக ஐம்பது மில்லியன் நிதி அறிவிக்கப்பட்டது. சாதனங்களையும் கருவிகளையும் மேம்படுத்த அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட் டது.
இது பற்றி விவரித்த எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் சின் ஹுவி, கிருமிப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் வாய்ப்புகளை சிறந்த வகையில் பயன் படுத்திக்கொள்ள அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் உதவும் என்று குறிப்பிட்டார்.
“உற்பத்தித் திறனைப் பெருக்கி புத்தாக்கத்துடன் செயல்பட்டு மேம்பட்ட போட்டித் திறனுடன் கிருமிப் பரவல் நெருக்கடியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்வோம்,” என்றும் அவர் கூறினார்.
‘SmartMX’ என்று அழைக்கப்படும் கைபேசி செயலியில் குறிப்பிட்ட விமானங்களில் ஏற்படும் கோளாறுகள், பராமரிப்பு கையேடுகள், அதற்குத் தேவையான கருவிகள் போன்ற விவரங்கள் ஒருங் கிணைக்கப்படும்.
“இதனால் பழுதுபார்ப்பு பணி களுக்கு நேரம் குறையும். இதன் மூலம் விரைவாக விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி பயணி களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடியும்,” என்று மேலும் அவர் கூறினார்.
இரண்டு புதிய சாதனங்களும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. விமான இயந்திரங்களை தூக்கும் சாதனமும் அவற்றில் ஒன்று.
இது, மனிதவளத்தைக் குறைப் பதோடு இயந்திரத்தை மாற்றுவதற்கான நேரம் 50 விழுக்காட்டுக்கு மேல் குறையும். கிருமிகளை அழிக்கும் தெளிப்பான் மற்றொரு சாதனமாகும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், விமானத் துறையை எதிர்காலத்துக்கு தயார்படுத்த திட்டங்கள் உதவும் என்றார்.
தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதையும் விமானச் சேவைகள் தொடங்குவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“பேரிடரின் நடுப்பகுதியில் நாம் இருக்கிறோம். அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும்,” என்று அமைச்சர் சொன்னார்.