கொரோனா கிருமித்தொற்று காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த காலத்தில், தம்முடைய சிறு வயது நண்பனின் வீட்டில் பூட்டை உடைத்துப் புகுந்து அங்கிருந்த ஆமையை எடுத்துச் சென்றார் ரோஜர் கூ ஸென் சுவான், 36.
பின்னர், அதனைத் தன்னுடைய செல்லப் பிராணி என்று குறிப்பிட்டு, ஆமையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் கூ.
சட்டவிரோதமாக வீட்டுக்குள் புகுந்த குற்றச்சாட்டை கூ இன்று காலை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் 2020ன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டியவரும், குற்றத்தை ஒப்புக்கொண்டவரும் தொடக்கப் பள்ளிக் காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நண்பனுக்கு எரிச்சலூட்டும் நோக்கில் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் செம்பவாங்கில் உள்ள அவரது வீட்டுக்குள் கடந்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி புகுந்தார் கூ. படுக்கையறைக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த பொருள்களைக் கலைத்துப் போட்டார்.
நண்பன் தனக்குத் தருவதாக உறுதியளித்திருந்த ஆமையை தாமே எடுத்துக்கொள்ள விரும்பினார்.
$2.50 மதிப்பிலான அந்த ஆமையை திருடியதுடன் அந்த வீட்டின் முன்புறக் கதவை, பூட்டு சரிசெய்யும் நபரின் உதவியுடன் சரி செய்தார் கூ.
படுக்கையறையில் கலைத்துப் போட்ட பொருள்களையும் ஆமை காணாமல் போயிருப்பதையும் வீடு திரும்பிய பிறகு கூவின் நண்பர் பார்த்தார். மேலும் கூ ஆமையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டதையும் அவர் பார்த்தார்.
யாரோ பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சம்பவம் பற்றி கூவின் நண்பர் அன்றிரவு சுமார் 11.50 மணியளவில் போலிசில் புகார் அளித்தார்.
ஆமையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் போலிசார்.
இந்தக் குற்றத்தை கூ புரிந்தபோது அவர் ‘bipolar disorder’ எனப்படும் இருவேறு மனநிலையைக் கொண்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூவுக்கு கட்டாய சிகிச்சை ஆணை விதிப்பதற்கான சாத்தியத்தை அறிய, அறிக்கையை மாவட்ட நீதிபதி மே மெசெனாஸ் கோரியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட கூ, தற்போது $10,000 பிணையில் இருக்கிறார். மார்ச் 1ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.