இவ்வாண்டில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரானது தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மெருகேற்றுதல் என இரு வழிகளில் இடம்பெறும்.
அதாவது, சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த இரு வாரங்களாக சமூகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதை திரு வோங் சுட்டினார்.
“இதே நிலை தொடர்ந்து, மேலும் எதுவும் நடவடிக்கை எடுக்காவிடில், புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி, பின்னர் நிலைமை நமது கட்டுப்பாட்டை மீறிப் போய்விடலாம்,” என்று அமைச்சர் வோங் கூறினார்.
அதனால், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மிகக் கவனமாக ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று சிங்கப்பூரில் பரவத் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி அமைச்சர் வோங்கும் பணிக்குழுவின் இன்னோர் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான கான் கிம் யோங் கடந்த செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.
அந்த ஒன்றரை மணி நேர நேர்காணலின்போது, கடந்த 12 மாதங்களில் பணிக்குழு எதிர்கொண்ட சவால்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசினர்.
அப்போது கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பங்காற்றிய, உதவிய முன்களப் பணியாளர்கள், தொண்டூழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா நெருக்கடியை சிங்கப்பூர் எதிர்கொண்ட விதம், சமூகத்தின் மீட்சித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் திறன்கள், மேம்பட்ட பரிசோதனை, தொடர்புகளின் தடமறியும் திறன்கள், தடுப்பூசி நடவடிக்கை எனப் பல வழிகளில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் முன்னிருந்ததைக் காட்டிலும் சிங்கப்பூர் இப்போது வலுவாக இருக்கிறது என்று அமைச்சர் வோங் விவரித்தார்.
ஆனாலும், உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் இருப்பதால் நிலைமை இன்னும் கணிக்க முடியாத ஒன்றாகவே நீடிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
அவ்வகையில் பார்த்தால், சிங்கப்பூர் இன்னும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக திரு வோங் சொன்னார். உண்மையில், ஓராண்டிற்கு முன் நாடு எப்படியிருந்ததோ கிட்டத்தட்ட அதே நிலைக்குத் திரும்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தோற்கடிக்கப்பட முடியாதவை அல்ல என்றும் அவர் சொன்னார்.
தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் நல்ல முறையில் இடம்பெற்று வருவதால் முடிவு கண்ணுக்குத் தெரிந்தாலும்கூட சிங்கப்பூர் இன்னும் அதிக தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்றும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் இருவரும் வலியுறுத்தினர்.