சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களில் முதல் பிரிவினர் ஜனவரி 14ஆம் தேதி கொவிட்-19 முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பெரும்பாலான படை வீரர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டம் உள்ளதாக தற்காப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
சிங்கப்பூர் ஆயுதப்படை தடுப்பூசி செயல்திட்டத்தின் முதல் கட்டம், மருத்துவ மற்றும் கொவிட்-19 களப்பணி ஊழியர்களை இலக்காகக் கொண்டது.
இது ஆறு வார காலத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டு இருக்கும் என்று அமைச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
ஆயுதப்படைகளின் பெரும்பாலான வீரர்களுக்கு இந்த ஆண்டு நடுப்பகுதியில் தடுப்பூசி போடும் திட்டம் இருப்பதாக அதே ஃபேஸ்புக் பக்கத்தில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.
முக்கியமான பாதுகாப்பு நிலைகளில், கடல் மற்றும் விமானத் தற்காப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் வீரர்களுக்கு அடுத்த கட்டத்தில் தடுப்பூசி போடப்படும். பிறகு மற்றவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
புக்கிட் கொம்பாக்கில் இருக்கும் தற்காப்பு அமைச்சு மருத்துவ நிலையத்தில் சென்ற வாரம் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங், தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோர் ஆயுதப்படையின் 20 வீரர்களுடன் சேர்ந்து தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது ஊசியும் போடப்படும்.
மருத்துவ ரீதியில் தகுதிபெறும் ஆயுதப்படை சேவையாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.