அலுவலகங்களில் கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர வேண்டும் என்று முத்தரப்புப் பங்காளிகள் வலியுறுத்தி இருக்கின்றன.
மூன்றாம் கட்டத் தளர்வுகளை அடுத்து, வேலையிடங்களில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதற்கான தேவை குறித்து கூட்டாக மறுஆய்வு செய்ததாக என்டியுசி, மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்புப் பங்காளிகள் குறிப்பிட்டன.
ஆயினும், அதிகம் பரவும் திறன்கொண்ட உருமாறிய கொரோனா கிருமிகளாலும் சமூகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும் பணியிடப் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்வதைத் தள்ளிப்போடுவது என முடிவு எடுக்கப்பட்டதாக அவை கூறின.