பெரிய நிறுவனங்களில் புத்தாக்கம் தொடர்பான முதலீடுகள் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சிக்கு முக்கிய ஆதரவளிக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய முதலீடுகள் கட்டமைப்புச் சவால்களுக்குத் தீர்வு கண்டு, கொவிட்-19க்கு பிந்திய உலகுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றும் திரு ஹெங் சொன்னார்.
ரோச்செஸ்டர் வளாகத்தில் நேற்று ‘பிசிஜி டிஜிட்டல் வென்சர்ஸ்’ (பிசிஜிடிவி) நிறுவனத்தைத் தொடங்கி வைத்து நிதி அமைச்சரும், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் பேசினார்.
‘பிசிஜிடிவி’ என்பது போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புத்தாக்கம் மற்றும் மின்னிலக்க வர்த்தக வளர்ச்சியை மையமாகக் கொண்ட துணை நிறுவனம். அது பெரிய நிறுவனங்களில் புதிய தொழில்துறை மாற்றம் காணும் வர்த்தகங்களை உருவாக்கும், மேம்படுத்தும், முதலீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.
“பெரிய நிறுவன முதலீடுகளில் ஈடுபடுவது, புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று. தற்போதைய நெருக்கடி காலத்திலிருந்து கொவிட்-19க்கு பிந்திய காலத்துக்கு பொருளியல் செல்ல வேண்டும் என்பதால், புத்தாக்க முயற்சிகள் இன்றியமையாததாகி விட்டது.
“நமது பொருளியல் கொள்கை மற்றும் நமது வரவுசெலவுத் திட்டங்களில் நமது முக்கிய நோக்கம் புத்தாக்கத்தில் முதலிடுதலாகத்தான் இருக்கும்,” என்று குறிப்பிட்ட திரு ஹெங், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி, புத்தாக்கம், நிறுவனமயமாதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் $25 பில்லியனைச் செலவழிக்க கடப்பாடு கொண்டுள்ளதைச் சுட்டினார்.
டிஜிட்டல் வென்சர்ஸ் நிறுவனத்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்த போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தைப் பாராட்டிய திரு ஹெங், அது சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் நிறுவன முதலிடுதலில் தனது நிபுணத்துவத்தை பரவலாகப் பரப்பும் ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்றார்.
“இந்தப் புதிய வளாகம் நமது மக்களுக்கு புதிய வேலைகளை பிசிஜி நிறுவனத்துக்குள்ளும் டிஜிட்டல் வென்சர்ஸ் நிறுவனத்துக்குள்ளும் உருவாக்கும்.
“தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்களைவிட பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் அடைய முடியும், விநியோகத் தொடர்களை அமைக்க முடியும், ஒரு வலுவான அறிவார்ந்த சொத்துத் தளத்தை உருவாக்க முடியும்.
“தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களுடன் இணைத்து அவற்றுக்கிடையே துடிப்பான பிணைப்பை ஏற்படுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்றும் திரு ஹெங் கூறினார்.