ஒருவருக்கு $80 ஆக இருந்த கொவிட்-19 விரைவுப் பரிசோதனைக்கான செலவு தற்போது $50க்குக் கீழ் குறைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்றுத் தெரிவித்தார்.
செயல்முறை, மனிதவள செலவுகள் உட்பட 'ஆன்டிஜென்' விரைவுப் பரிசோதனையின் செலவுகள் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.
"காலப்போக்கில், மலிவான, விரைவான, நிர்வகிக்க மிகவும் வசதியான மேலும் புத்தாக்கமிக்க விரைவு பரிசோதனைக் கருவிகளை எதிர்பார்க்கலாம். இவை விரிவாகவும், எளிதாகவும் சோதிக்க உதவுவதுடன் தொற்றுகளைக் கண்டறிந்து, மக்களை இன்னும் முழுமையாகப் பாதுகாக்க உதவும்," என்று திரு வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 'ஆன்டிஜென்' விரைவுப் பரிசோதனை மிகவும் உணர்திறன் வாய்ந்தது. ஆனால் பல்படிய தொடர்வினை சோதனை (பிசிஆர்) சற்று தாமதமாகும்.
சிங்கப்பூர் முதன்முதலில் சோதனையை மேற்கொண்டபோது பல்வேறு குழுக்களிடையே கவலைகள் வெளிப்பட்டன என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சிலர் இது ஒரு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்தனர், மற்றவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது களங்கமாகப் படியும் என நினைத்தனர். ஆனால் தற்போது அனைவருமே கிருமி பரிசோதனையின் முக்கியத்தையும் அவசியத்தையும் புரிந்துகொண்டு, வரவேற்க முடிகிறது என தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.
அடிக்கடி, பரவலான சோதனைகள் சிங்கப்பூருக்கு முக்கிய உதவியாக இருப்பதாகவும், வரும் மாதங்களில் இது அதிகரிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொற்றுநோய்களின்போது தொடர்ச்சியான சோதனை வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற மனப்போக்கிற்கு சிங்கப்பூரர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றார் திரு வோங. தற்போது, கடுமையான சுவாசத் தொற்று அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவரைப் பார்க்கும் எவரும் பிசிஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் என்று திரு வோங் கூறினார்.
டிசம்பரில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 14,000க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அண்மைய தொற்றுகள் இவ்வாறுதான் கண்டறியப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
"உடல்நிலை சரியில்லாத எவரும் உடனடியாக மருத்துவரைச் சென்று காண்பது மிகவும் முக்கியம்," என்ற அமைச்சர், மருத்துவர் கொரோனா பரிசோதனையை அறிவுறுத்தினால் அதற்கு இணங்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், சிங்கப்பூர் மூன்றாம் கட்ட தளர்வுகளைச் செயல்படுத்தும்போது, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

