தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையிலும் சமூக அளவிலான கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிக்கின்றன. எனவே இவ்வாண்டு சீனப் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட நிலைமையில், சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாக விளங்கிய இரவுச் சந்தை எனப்படும் ‘பசார் மாலாம்’ மீண்டும் வருவதற்கான அறிகுறி எதுவும் இப்போதுவரை காணப்படவில்லை. எனவே பசார் மாலாம் வியாபாரிகளில் ஒருசிலர் நிரந்தரக் கடைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர். பசார் மாலாம் சந்தையில் முன்னணி வகித்து வந்த ‘டியோசியூ மீட் பஃப்’ என்னும் உணவு தயாரிப்பு நிறுவனம், பகுதி பகுதியாகச் ெசன்று கடைவிரிக்கும் நாடோடித்தன பாணியைக் கை விட்டு முழுமையாக ஓரிடத்தில் கடையை நிறுவி வியாபாரம் செய்து வருகிறது.
உட்லண்ட்ஸில் உள்ள வேவ் 9 கட்டடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கடையைத் தொடங்கிய இந்நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை உரிமையாளர் கெய்த் ஹூ, 53, முதல் இரண்டு மாதங்கள் தங்களது வழக்கமான வாடிக்கையாளர்கள் தேடி வந்து உணவு வாங்கியதாகக் கூறினார்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பசார் மாலாம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனத்துக்கு சிங்கப்பூர் முழுவதும் பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆயினும் கடை தொடங்கி இரண்டு மாதம் ஆன நிலையில் வாடிக்கையாளர் வருகை சரியத் தொடங்கியதாகக் கூறி வருத்தப்பட்டார் திரு ஹூ.
இவர் அளவுக்குக் கடை வைக்க வசதி இல்லாத பலர் கைவிடப்பட்டதாக உணருவதாகவும் மேலும் சிலர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் ஐவன் ஹோ, 65, எனப்படும் பசார் மாலாம் வியாபாரி கூறினார். இவரும் கூடாரக் கடை ஒன்றை தொடங்கி உள்ளார்.
இதற்கிடையே, தங்களுடன் அடிக்கடி இணைந்து பணியாற்றக்கூடிய 100 பசார் மாலாம் வியாபாரிகள் இருப்பதாகவும் அவர்களில் ஐந்தில் ஒருவர் தனியாகக் கடைகளைத் தொடங்கி இருப்பதாகவும் ‘சிங்கப்பூர் நைட் பஸார்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெய்ன் லிம், 36, கூறினார்.