பலூன் சிற்பங்களை உருவாக்கும் பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டு வந்த 52 வயது ஓர் செங் கிம் எனும் மாது விபத்தில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அந்தத் துயரச் செய்தியறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூரோங்கில் இருக்கும் தம் வீட்டுக்கு அருகில், இரு வாரங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார் திருவாட்டி ஓர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரின் இரங்கல் செய்தியைக் கொண்ட கடித உறையைப் பிரித்ததும் திருவாட்டி ஓரின் தந்தை பெரிதும் ஆச்சரியத்துக்கு உள்ளானதாக திருவாட்டி ஓரின் தங்கை சமந்தா தெரிவித்தார்.
கடந்த 2018, 2019 ஆண்டுகளில் தனியார் நிகழ்ச்சிகளில் பலூனைக் கொண்டு சுவர்கள் அமைத்த திருவாட்டி ஓரை தாம் இரு முறை சந்தித்ததை பிரதமர் லீ அந்த இரங்கல் கடிதத்தில் நினைவுகூர்ந்திருந்தார்.
திருவாட்டி ஓரின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவெடுத்ததையும் பிரதமர் லீ கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தம் மகளை நிகழ்ச்சிகளில் சந்தித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் திருவாட்டி ஓரின் தந்தை.
குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த திருவாட்டி ஓர், வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான செய்திகள் கடந்த வாரம் வெளியாகின.
தம் தாயாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் அனைவரும் ஒப்புக்கொண்டதாக திருவாட்டி ஓரின் மகன் இங் சொங் சிங்,17, தெரிவித்தார்.
தம் தாயாரும் இதைத்தான் விரும்பியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவாட்டி ஓரின் கண்விழிப்பு சடங்கின்போது குடும்பத்தாரை நேரில் சந்தித்து இரங்கலைத் தெரிவித்தார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்.
திரு தர்மன் சண்முகரத்தினம் திருவாட்டி ஓர் வசித்து வந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
தன் சகோதரியை உதவிசெய்யும் நல்ல உள்ளம் என சிங்கப்பூரர்கள் நினைவுகூர்வது மனதை நெகிழ வைப்பதாக இருக்கிறது என்றார் திருவாட்டி ஓரின் தங்கை.