சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதை தலைமை சுகாதார விஞ்ஞானி டான் சோர் சுவான் நேற்று சுட்டினார்.
“கொவிட்-19 தடுப்பூசி மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை வெகுவாக உயரும் என நம்பப்படுகிறது,” என்று தடுப்பூசி மீதான நம்பிக்கையை உயர்த்துவது தொடர்பாக உலகப் பொருளியல் கருத்தரங்கு ஏற்பாட்டில் நடைபெற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் விரைந்தபோது அது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதில் பலரிடையே சந்தேகம் நிலவியது.
ஆனால் தற்போது பல நாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடங்கியிருக்கும் வேளையில் அதன் மீது உள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதாக கலந்துரையாடலில் பங்கேற்ற ஆய்வாளர் திரு பென் பேஜ் கூறினார்.
இந்நிலையில், அங் மோ கியோ, தஞ்சோங் பகார் ஆதிய வட்டாரங்களில் வசிக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்க இருக்கிறது.
அதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று அதுபற்றி பேசினர். கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து முதியவர்கள் சிலர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிலிருந்து தெரியவந்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பலதுறை மருந்தகங்களில் முன்பதிவு செய்துகொள்ள ஒவ்வொரு குடியிருப்பிலிருந்து ஏறத்தாழ 5,000லிருந்து 10,000 வரையிலான முதியவர்களுக்கு அழைப்பு விடுக்கும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும். தடுப்பூசி மருந்து வீணாகாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி தயார்நிலையில் வைக்கப்பட்டும் அதைப் போட்டுக்கொள்ள யாரும் வராவிட்டால் அது வீணாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக முதியவர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர். ஃபைசர்-பாயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதம் இல்லை என்று முதியவர்கள் சிலர் அக்கறை தெரிவித்தனர்.
அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பயனில்லை என்று சிலர் கருத்து தெரிவித்தனர். மறுமுனையில், கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக முதியவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்றால் இளைஞர்களைவிமுதியவர்கள் மரணம் அடையும் சாத்தியம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.