தாழ்வான பகுதிகள் உள்ள ஜாலான் புசார் வட்டாரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க அங்கு புதிய நிலத்தடி நீர் தடுப்புத் தொட்டி வரும் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது.
சையது ஆல்வி ரோட்டுக்கு அருகில் அமையவிருக்கும் அந்த நீர் தடுப்புத் தொட்டியின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் தொடங்கும்.
அடிக்கடி கடுமையான மழைப் பொழிவுகளைக் கொண்டு வரும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நீர் தடுப்புத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டவுடன் அது 9,300 கன மீட்டர் அளவுள்ள அதாவது நான்கு ஒலிம்பிக் நீச்சல் குளத்தை நிரப்பக்கூடிய அளவுள்ள நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
ரோச்சோர் கெனல் கால்வாயிலிருந்து நீர் சையது ஆல்வி ரோட்டில் உள்ள வடிகால்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விதத்தில் தொட்டி அமைக்கப்படும் என்று கழகம் நேற்று கூறியது.
மேலும் அப்பகுதியில் பெய்யும் மழை நீரை தற்காலிகமாக அத்தொட்டியில் சேமித்து வைக்க முடியும். கடும் மழைப் பொழிவுக்குப் பிறகு சேமித்து வைக்கப்பட்டு உள்ள அந்த நீர் மீண்டும் கால்வாய்க்குத் திருப்பி விடப்படும்.
இந்த வட்டாரத்தில் வெள்ளப் பெருக்கைத் தடுக்க கழகம் முன்பு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
2015ல் சுங்கை ரோடு, ரோச்சோர் கெனல் ரோடு ஆகியவற்றின் நெடுகில் ஓடும் ரோச்சோர் கெனல் கால்வாயின் அளவு விரிவுப்படுத்தப்பட்டு, அதன் ஆழமும் அதிகப்படுத்தப்பட்டது.
சையது ஆல்வி ரோட்டில் நீர் தடுப்புத் தொட்டி கட்டும் திட்டத்தை கடந்த ஆண்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.