சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த 13,000க்கும் அதிகமான மாணவர்கள், ஊழியரணிக்குத் தங்களைத் தயார்ப்படுத்த உதவும் கைபேசி செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
‘NUS career+’ என்று அழைக்கப்படும் இச்செயலி நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது கல்வி, வாழ்க்கைத் தொழில் பாதைக்குத் திட்டமிட செயற்கை நுண்ணறிவு, பரந்த அளவிலான தரவுகளை இந்தக் கைபேசி செயலி பயன்படுத்துகிறது.
மாணவர்கள் பெற்றுள்ள திறன்களையும் அவர்களிடமிருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களையும் இந்தச் செயலி கண்காணிக்கிறது.
என்யுஎஸ், உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜாப்டெக்’ ஆகியவை இச்செயலியை இணைந்து உருவாக்கியுள்ளன.
இளநிலைப் பட்டக்கல்வியை மேற்கொள்ளும் 32,000 என்யுஎஸ் மாணவர்களும் இச்செயலிக்குப் பதிவு செய்துகொள்ளலாம். மாணவரின் கல்வி நிலையைப் பொறுத்து அவரது திறனுக்கேற்ப வழிகாட்டுதலை வழங்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட திறனை மாணவர் பெற வேண்டியிருந்தால், அதற்கான பாடங்களையும் செயலி பரிந்துரைக்கும்.
மாணவர்களுக்கு வேலையைத் தேடித் தரும் வழக்கமான இணையவாசல்கள், மாணவர்களின் தேடுதல் விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவதாக என்யுஎஸ் குறிப்பிட்டது.
ஆனால் தனது செயலி, அன்றாடம் வெளியிடப்படும் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை ஆராய்ந்து, அந்தந்த மாணவரின் தகுதிக்கு ஏற்ற வேலைகளைப் பரிந்துரைப்பதாகச் சொன்னது.
“இந்த ஏற்பாடு மாணவர்களுக்குப் பரிட்சயமில்லாத வேலைகள் உட்பட பரந்த வேலை வாய்ப்புகளை வழங்குகிறது,” என்று என்யுஎஸ் விவரித்தது.
இச்செயலியில் மற்ற சில சிறப்பம்சங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, எதிர்காலத்தில் எந்தெந்த திறன்கள் மாணவர்களுக்கு தேவைப்படும் என்பதை இது காட்டுகிறது.
இந்த வாரம் மூன்று நாட்களுக்கு என்யுஎஸ் வேலை வாய்ப்புக் கண்காட்சியை என்யுஎஸ் நடத்துகிறது.
இதுவரை என்யுஎஸ் நடத்தியுள்ள ஆகப்பெரிய மெய்நிகர் வேலை கண்காட்சி இதுவே.