பாதுகாப்பு, தரம், செயல்திறன் ஆகிய அம்சங்களில் கடுமையான தரங்களை நிறைவேற்றும் தடுப்பூசி மருந்துகளே, சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.
எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்போது மக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதிகமானோர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் மக்களின் பாதுகாப்பு வலுவாகிறது என்றும் கொவிட்-19 தொற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் கூறினார்.
ஊட்ரம் பலதுறை மருந்தகத்தில் நேற்று மூத்த குடிமக்களும் முன்களப் பணியாளர்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அங்கு சென்ற அதிபர் ஹலிமாவும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். "விரைவாக, எளிதாக, வலியின்றி தடுப்பூசி போடப்பட்டது," என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

