சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்தைப் படிப்படியாக மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. அதே நேரத்தில், சுற்றுப்பயணங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இருதரப்பு பயண ஏற்பாடு செய்துகொள்வது குறித்து பேசவில்லை என்று சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே செய்துகொள்ளப் பட்ட இருதரப்புப் பயண ஏற்பாடு (ஏர் டிராவல் பப்பல்), தனிமைப்படுத்தல் விதிகளிலிருந்து பயணிகளுக்குச் சிறப்பு விதிவிலக்கு அளிக்கும். ஆயினும், நாடுகள் இருதரப்புப் பயண உடன்பாட்டைச் செய்துகொள்ளாத பட்சத்தில், மீண்டும் தொடங்கப் படும் வணிகரீதியிலான பயணிகள் விமானப் போக்குவரத்திற்குத் தானாகவே அவ்விதிவிலக்கு பொருந்தாது. சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கு சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணயம் விளக்கம் அளித்துள்ளது.
'சிஎன்பிசி' செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே மீண்டும் விமானப் பயணத்தைத் தொடங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்புப் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ள வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு, திரு குமரன் அவ்வாறு பதிலளித்து இருந்தார்.
சிங்கப்பூர்-இந்தியா இடையே விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முயலவும் அதனை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சொன்னார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரர்கள் பலரும் இணையம் வழியாகத் தங்களது அக்கறைகளை வெளிப்படுத்தினர். வெளிநாடுகளில் இருந்து வரும் கிருமித்தொற்று பாதிப்புகளில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் நிலையில், அந்நாட்டுடன் இருதரப்புப் பயண ஏற்பாட்டைச் செய்துகொள்வது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுவரை, ஹாங்காங்குடன் மட்டுமே சிங்கப்பூர் இருதரப்புப் பயண ஏற்பாட்டைச் செய்துகொண்டு உள்ளது. ஆயினும், ஹாங்காங்கில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அந்த ஏற்பாடும் கால வரம்பின்றித் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "இருதரப்புப் பயண ஏற்பாடு குறித்து நாடுகளுக்கு வெவ்வேறான புரிதல் இருக்கலாம். இந்தியாவுடன் அத்தகைய ஏற்பாட்டைச் செய்து கொள்வது குறித்து சிங்கப்பூர் பேசவில்லை," என்று விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
இப்போது, தாயகம் திரும்ப விரும்புவோருக்காக இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவதாக ஆணையம் குறிப்பிட்டது. அதே வேளையில், பயணிகள் விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆராய இரு நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அது கூறியது. "கொரோனா பரிசோதனை, வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு போன்ற பயணக் கட்டுப் பாடுகள், எல்லை, சுகாதார நடவடிக்கைகளுக்குப் பயணிகள் உட்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

