பிரதமர் லீ சியல் லூங் தமது இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியை இன்று காலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மொத்தம் இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இம்மாதம் 8ஆம் தேதியன்று திரு லீக்கு அவரது முதல் தடுப்பூசியைப் போட்ட 41 வயது மூத்த ஸ்டாஃப் தாதி ஃபாத்திமா முகம்மது ஷா இரண்டாவது தடுப்பூசியையும் போட்டார்.
"எனது முதல் தடுப்பூசியைப் போலவே இதுவும் கண்மூடித் திறப்பதற்குள் போடப்பட்டது. வலி ஏதும் இல்லை.
"தடுப்பூசி போட்ட பிறகு ஏறத்தாழ அரை மணி நேரத்துக்கு மருத்துவர்கள் எனது உடல்நிலையைக் கண்காணித்தனர். நான் நலமாக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதார அமைச்சு துரிதப்படுத்துவதாகவும் மேலும் பல தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படுவதாகவும் திரு லீ தெரிவித்தார்.

