நாளை மறுநாளிலிருந்து சிங்கப்பூரில் உள்ள ஏதேனும் ஒரு சமூக மன்றம் அல்லது நிலையத்திலிருந்து பொதுமக்கள் தங்கள் டிரேஸ்டுகெதர் சாதனத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு முன்பு அவரவர் தொகுதிகளில் உள்ள சமூக மன்றங்கள் அல்லது நிலையங்களிலிருந்து மட்டும் டிரேஸ்டுகெதர் சாதனங்களைப் பெற முடிந்தது.
டிரேஸ்டுகெதர் திட்டத்தின்கீழ் இதுவரை 2.6 மில்லியனுக்கும் அதிகமான டிரேஸ்டுகெதர் சாதனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காண இந்த டிரேஸ்டுகெதர் சாதனங்கள் உதவும். அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர். இதன்மூலம் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 400,000 டிரேஸ்டுகெதர் சாதனங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
தங்கள் டிரேஸ்டுகெதர் சாதனங்களில் உள்ள பேட்டரிகள் தீர்ந்துவிட்டாலோ அல்லது சாதனங்கள் பழுதடைந்துவிட்டாலோ சமூக மன்றங்களிலிருந்து புதிய டிரேஸ்டுகெதர் சாதனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
டிரேஸ்டுகெதர் சாதனத்தில் சிவப்பு ஒளி விட்டுவிட்டு எரிந்தாலோ அல்லது ஒளி விட்டுவிட்டு எரிவது நின்றுவிட்டாலோ அதை மாற்ற வேண்டும்.
நிமிடத்துக்கு ஒருமுறை பச்சை ஒளி விட்டுவிட்டு எரிந்தால் சாதனம் சரியாக இயங்குகிறது என்று அர்த்தம். கைபேசியில் டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கும் கைபேசி இல்லாதவர்களுக்கும் இந்த டிரேஸ்டுகெதர் சாதனம் உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியிலிருந்து குடியிருப்பாளர்களுக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போருக்கும் டிரேஸ்டுகெதர் சாதனங்களை இலவசமாக 20 சமூக மன்றங்கள் விநியோகம் செய்தன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று கூடுதலாக 18 சமூக மன்றங்கள் டிரேஸ்டுகெதர் சாதனங்களை விநியோகம் செய்யத் தொடங்கின.

