கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்பில் 5,380 வேலை இடங்களில் அமைச்சு சோதனை; பல முறை எச்சரிக்கைக்குப் பிறகு நடவடிக்கை
வீடுகளில் இருந்து வேலை பார்ப்பதை இப்போதைக்கு நிரந்தரமாக்கும்படியும் அலுவலகத்தில் பாதுகாப்பான இடைவெளியை உறுதிப்படுத்தும்படியும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுக்கப்பட்டாலும் வேலையிடப் பாதுகாப்பு நிபந்தனைகளை மதித்து நடக்க மேலும் பல நிறுவனங்கள் தவறிவிட்டன.
அந்த நிறுவனங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் 28 முதல் இந்த ஆண்டு ஜனவரி 15 வரை இத்தகைய குறைபாடுகளுக்காக சுமார் 42 முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்று மனிதவள அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
வீடுகளில் இருந்தே வேலை பார்க்க முடியும் என்றாலும் அலுவலகத்துக்கு வரும்படி ஊழியர்களை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதும் வேலையிடங்களில் பொதுவான பகுதிகளில் பாதுகாப்பு இடைவெளி அடையாளங்களைத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட தவறியதும் பொதுவான விதிமீறல்களாக இருந்தன.
இந்த அமைச்சு, 5,380 வேலைஇடங்களைப் பரிசோதனை செய்தது. அதற்குப் பிறகு 42 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அமைச்சு சென்ற ஆண்டு ஜூன் மாதம் தலா $1,000 வீதம் 52 முதலாளிகளுக்கு அபராதம் விதித்தது. குறைபாடுகள் காணப்பட்டதற்காக ஏழு வேலையிடங்கள் மூடப்பட்டன. அதனையடுத்து இப்போது மேலும் பல நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளன.
விடுமுறை காலத்தைக் கருத்தில்கொண்டு போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு துறையை இலக்காக வைத்து கடந்த டிசம்பரில் அமைச்சு ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கியது.
அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிப்பது உள்ளிட்ட வேலையிடப் பாதுகாப்பு கட்டுப்பாடு கள், சென்ற ஆண்டு ஜூன் மாதம் முடிந்தபோது நடப்புக்கு வந்தன.
அவை செப்டம்பர் 28ஆம் தேதி கொஞ்சம் தளர்த்தப்பட்டன. மேலும் பலர் வேலையிடத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் அலுவலகங்களில் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் மனிதவள அமைச்சும் சென்ற மாதம் தெரிவித்தன.
இதனிடையே, ஊழியர்கள் தொலைதூரத்தில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறைக்குத் தாங்கள் பழக்கப்பட்டுவிட்டதாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
இருந்தாலும் இத்தகைய ஏற்பாடுகள் கொவிட்-19க்குப் பிறகு எந்த அளவுக்குத் தொடர வேண்டும் என்பதைப் பொறுத்தவரை சில நிறுவனங்கள் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன.
ஊழியர்களுக்கு நீக்குப்போக்கை அளிக்கக்கூடிய ஏற்பாட்டு முறை நடப்புக்கு வரலாம் என்று பெரும்பாலானவர்கள் யோசனை கூறினர்.

