அமைச்சர்: முன்னணி முதலீட்டாளர்களைக் கவர்ந்து இலக்கை நிறைவேற்ற திட்டம்
சிங்கப்பூர், உலகின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்களைக் கவர்ந்து ஈர்த்து அவை இங்கு செயல்படுமாறு செய்து அதன் மூலம் தனது வலுவான உற்பத்தித் துறையை மேலும் வளர்க்க செயல்பட்டு வருகிறது.
உற்பத்தித் தொழில்துறை சிங்கப்பூர் பொருளியலின் மிக முக்கிய தூணாக தொடர்ந்து இருந்துவரும் என்பதால் அந்தத் துறையின் இப்போதைய ஆற்றலை மேலும் பலப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
உயிர்மருத்துவ அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், நகர போக்குவரத்து, பொருளியல் வளத்துடன் இயற்கை வளத்தையும் கட்டிக்காப்பது போன்ற துறைகள் வளர்ச்சி கண்டு வருகின்றன.
சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் அளவையும் ஆற்றலையும் இந்தத் துறைகளில் விரிவுபடுத்த அரசாங்கம் முயல்கிறது என்றார் அவர்.
‘இல்லுமினியா’ என்ற உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அமைச்சர் வருகையளித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், இந்தப் புதிய துறைகளில் மேலும் பல முன்னணி நிறுவனங்கள் இங்கு தளம் கொண்டு செயல்படும் என்பதால் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும் என்றார்.
இதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உட்பட முழுமையான பலன் ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.
அடுத்த தலைமுறை உற்பத்தித் துறை ஆலைகளில் அசுத்த மான வேலைச் சூழல் இருக்காது. அந்த ஆலைகள் ஆபத்தானவையாகவும் சலிப்பூட்டுபவையாகவும் இருக்கமாட்டா என்பதை திரு சான் சுட்டினார்.
சிங்கப்பூர் முன்னேறிய உற்பத்தித்துறை மையமாகத் திகழ, தேவைப்படக்கூடிய முக்கியமான மூன்று உத்திகளையும் திரு சான் கோடிகாட்டினார்.
உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, வலுவான ஆய்வுவள ஏற்பாட்டை பலப்படுத்துவது, தொழில்துறை உருமாற்ற திட்டங்களில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவை அந்த உத்திகள் என்று அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தித்துறையை 2030ஆம் ஆண்டு வாக்கில் 50 விழுக்காடு வளர்ப்பது சிங்கப்பூரின் புதிய 10 ஆண்டு திட்டமாக இருக்கிறது. இந்தத் திட்டம் பற்றி கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது.