மத்திய விரைவுச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தனித்தனியாக இரண்டு சாலை விபத்துகள் நிகழ்ந்தன.
அவற்றின் தொடர்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
முதலாவது விபத்தில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டு இருந்தன. அதை அதிகாரிகள் கையாண்டு கொண்டு இருந்தபோது மோட்டார்சைக்கிள் சம்பந்தப்பட்ட இரண்டாவது விபத்து நிகழ்ந்தது. 27 வயது கார் ஓட்டுநர் ஒருவரும் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த 29 வயது ஆடவரும் கைதான தாக அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது அந்தச் சாலைப் பகுதி வழியாக கிராப் நிறுவன வாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டு இருந்தார். அவருடைய வாகனத்தில் இருந்த படச்சாதனம் விபத்துகளைப் படம் எடுத்தது.
அந்தக் காணொளி ‘எஸ்ஜி ரோடு வெஜிலன்ஸ்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. வேகமாக வந்த ஒரு சிவப்பு நிற கார், முன்னே சென்றுகொண்டு இருந்த நீல நிற கார் மீது மோதியது.
அதனால் நீல நிற கார் தலை குப்புற கவிழ்ந்தது. காரின் உடைந்த பகுதிகள் சாலையின் ஐந்து தடங்களிலும் சிதறி விழுந்தன. திரு லிம் என்ற அந்த கிராப் வாகன ஓட்டுநர் விபத்து பற்றி போலிசிடம் தெரிவித்தார்.
வேகமாக வந்த சிவப்பு நிற காரை ஓட்டி வந்தவர் அவரே வாகனத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அந்த வாகன ஓட்டுநர் தெரிவித்தார்.
நீல நிற காரை ஓட்டி வந்தவரும் அதிலிருந்த பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.