கழிவறைத் தொட்டிக்கு வெளியே சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியின் மீது ஏற்பட்ட கோபத்தால் அவரைக் கொன்றதாக மாற்றான் தந்தை ஒருவர் மீது இன்று (பிப்ரவரி 2) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முகம்மது சாலிஹின் இஸ்மாயில் எனும் அந்த 28 வயது ஆடவர், நூர்சப்ரினா அகஸ்டியானி அப்துல்லா எனும் அந்தச் சிறுமிக்கு மரணத்தை விளைவிக்கும் விதத்திலான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புக்கிட் பாத்தோக்கில் உள்ள அவர்களது வீட்டில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் 2ஆம் தேதி காலை 9.40 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
குற்றம் நீருபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அந்தச் சிறுமியிடம் வன்முறையில் ஈடுபட்டதாக மேலும் இரு குற்றச்சாட்டுகளையும் அந்த ஆடவர் எதிர்கொள்கிறார். அவை இரண்டும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தடுப்பு முகாமிலிருந்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சாலிஹினின் பராமரிப்பின்கீழ் சிறுமி வந்தார்.
சாலிஹினின் மனைவி தற்போது சிறையில் இருக்கிறார். அவர் அரசுத் தரப்பு சாட்சியாகச் செயல்படுவார் என்று கூறப்பட்டது.
தண்ணீரில் குளிக்க முடியாதெனக் கூறிய சிறுமியின் பின்புறத்தில் சூடான தண்ணீர் விழுந்துகொண்டிருந்த பூத்துவாலைக் குழாயை 6 வினாடிகள் வரை வைத்திருந்தது, சாப்பிட அடம்பிடித்து கட்டிலின் கீழே ஒளிந்துகொண்ட சிறுமியின் தலையை தடையில் மோதியது போன்ற துன்புறுத்தல்களை சாலிஹின் சிறுமிக்குச் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்த மூன்று செயல்பாடுகளை மட்டும் வைத்து, சாலிஹின் வன்முறையில் அதிகளவி ஈடுபட்டார் என்ற முடிவுக்கு வர முடியாது என்று குறிப்பிட்டார் தற்காப்பு வழக்கறிஞர் சியாஸானா யாஹ்யா.
வழக்கு நாளையும் தொடரும்.