ஒரு கடைத்தொகுதியில் ‘சேஃப் என்ட்ரி’ மூலம் நுழைவுப் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் அத்தொகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்லும்போது அங்கும் சேஃப்என்ட்ரி பதிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது கருவி மூலம் கட்டாயமாக நுழைவுப் பதிவு இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை நடப்புக்கு வரும்போது இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்.
உதாரணத்துக்கு தற்போது, பல வருகையாளர்களைக் கொண்ட பொது இடங்கள், கொவிட்-19 சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ள கடைத் தொகுதிகள், உணவகங்கள், வேலையிடங்கள் ஆகியவற்றுக்குச் செல்வோர் சேஃப்என்ட்ரி அல்லது டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவி மூலம் நுழைவு பதிவு செய்யப்படுகிறது.
இது கொரோனா கிருமித்தொற்று தொடர்பிலான தொடர்பு தடமறிதலுக்குப் பயன்படுத்தப்படும்.
வாசலில் நுழைவைப் பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் கடைத்தொகுதியில் செல்லும் ஒவ்வோர் இடத்திலும் நுழைவைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்போது டிரேஸ்டுகெதர் மூலம் நுழைவைப் பதிவு செய்வது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் லியோன் பெரேரா கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ பதில் அளித்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், “பொது இடங்களில் டிரேஸ்டுகெதர் மூலம் மட்டும் நுழைவைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போது நடப்பில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் உள்ள சேஃப்என்ட்ரி நுழைவுப் பதிவு முறை சில இடங்களில் அகற்றப்படும்.
“அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. நீங்கள் டிரேஸ்டுகெதர் மூலம் மட்டும் கொண்ட நுழைவைப் பதிவு செய்து பிறகு, கிருமித்தொற்று அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போதும் அங்கும் வாடிக்கையாளர்கள் டிரேஸ்டுகெதர் மூலம் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
“அங்குள்ளவர்கள் அதிக நேரத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடும் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுக்கான அதாவது உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபடும்போது அல்லது உணவு, பானக் கடையில் உண்ணும்போது அவர்கள் முகக்கவசத்தை அகற்றியிருக்கக்கூடும் என்பதே அதற்கான காரணம்,” என்று கூறினார் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.
இப்போது மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர் டிரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது அதன் கருவியைப் பெற்றுள்ளனர்.
டிரேஸ்டுகெதர் மூலம் மட்டும் நுழைவைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டவுடன் மக்கள் தங்கள் திறன்பேசி மூலம் ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தல், சிங்பாஸ் மூலம் திறன்பேசி செயலி, தங்கள் அடையாள அட்டையில் உள்ள பார்கோட் குறியீடு ஆகியவற்றின் மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய முடியாது.