ஒருவரின் செயலால் பிறருக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை கொவிட்-19 கொள்ளைநோய் சிங்கப்பூரர்களை மேலும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். கிருமிச் சூழல் சிங்கப்பூரர்களைப் பல வழிகளில் மாற்றியுள்ளதாகவும் தினமும் முகக்கவசம் அணிவது, பிறர் மீது பரிவு, அன்பு காட்டும் வழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
"குறிப்பாக வசதிகுறைந்தவர்களிடம் சிங்கப்பூரர்கள் நடந்துகொண்ட விதம், உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒன்று. இந்தக் கொள்ளைநோயுடன் அன்பு, பெருந்தன்மை, பரிவு ஆகியவையும் பரவிஉள்ளன," என்று நேற்று நடைபெற்ற 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2020ஆம் ஆண்டின் உன்னத சிங்கப்பூரர் விருது' நிகழ்ச்சியில் அவர் கூறினார். சென்ற ஆண்டின் தரவுகளின் மூலம் உதவி தேவைப்படுவோருக்கு மேலும் அதிகமானோர் நன்கொடை அளித்துள்ளனர் என்றும் தொண்டூழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
"நம் சொந்த கடப்பாடுகள், தேவைகளை மீறி பிறரைப் பற்றி எண்ண வேண்டும் என்ற சிந்தனை பல சிங்கப்பூரர்களின் ஆழ்மனதில் வேரூன்றி உள்ளதை உணர முடிகிறது," என்றார் திருவாட்டி ஹலிமா. இதேபோன்ற ஒருமைப்பாட்டை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கவில்லை என்று அவர் சுட்டினார். 2020ஆம் ஆண்டு சவால்மிக்க ஒன்றாக இருந்ததால் இந்த விருது நிகழ்வு மேலும் அர்த்தம் நிறைந்ததாகிறது என்றார்.
"நம் பொருளியலும் நம் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. நிலையானது என்று எண்ணிக் கடைப்பிடித்தவை அனைத்தையும் பெருமளவில் மாற்றம் செய்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்," என்றார் அவர்.
"நம் ஒவ்வொருவரின் செயல்களும் நடத்தையும் மற்றவர்களின் நலனைப் பாதிப்பது குறித்து நாம் தற்போது மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது," என்றார்.
விருது பெற்ற எண்மரைப் பாராட்டி, மேம்பட்ட சமூகத்தை உருவாக்க பாடுபடும் நபர்களை இவ்விருது அடையாளம் காண்பதாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.

