சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் வளாகத்தின் கீழ்த்தளத்தில் உள்ள ஈரச்சந்தையில் இறைச்சி, காய்கறிகள், சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க நேற்று காலை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அங்கு வந்தனர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து உணவருந்தவுள்ள நிலையில், பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஈரச் சந்தையில் திரண்டனர்.
நேர இடைவெளி விட்டு, ஒரே நேரத்தில் ஏறக்குறைய 20 பேர் சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஈரச்சந்தைக்கு தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் வருவதாகக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள், சந்தைக்குள் நுழைய வரிசையில் நிற்க வேண்டியிருந்தது இதுவே முதன்முறை எனக் கூறினர்.
என்றாலும், சீனப் புத்தாண்டை முன்னிட்டு இந்தச் சந்தையில் காசுக்கு ஏற்ற கடலுணவு விற்கப்படுவதால் தாங்கள் வரிசையில் நிற்கத் தயங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.