‘நூடல்ஸ்’ பொட்டலங்கள் உள்ளே இருப்பதாக பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் அவற்றில் இருந்ததோ 2,300 பெட்டிகள் நிறைய வரி செலுத்தாத சிகரெட்டுகள். இவற்றைக் கொண்டுவர முயற்சி செய்த 33 வயது சீன நாட்டவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று தெரிவித்தது. ஆடவர் ஜனவரி 29ஆம் தேதியன்று துவாஸ் சவுத் ஸ்திரீட் 1க்கும் 3க்கும் இடையே இருந்த சந்து ஒன்றில் நடந்த அமலாக்க நடவடிக்கையின்போது கைதானார்.
வேன் ஒன்றில் கள்ள சிகரெட்டுகள் இருப்பதன் சந்தேகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வாகனத்தைச் சோதனையிட்டபோது ‘நூடல்ஸ்’ என்று குறிக்கப்பட்ட பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
வரி செலுத்தாத சிகரெட்டுகளை அடையாளம் அறியப்படாத வேறொரு ஆடவரின் உத்தரவில் வாடிக்கையாளர்களுக்குக் கைதான சீன நாட்டவர் விநியோகம் செய்யவிருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
சிகரெட்டுகளுக்குச் செலுத்த வேண்டிய வரி சுமார் $196,420 என்றும் அவற்றுக்கான பொருள், சேவை வரி $15,900 என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.