இல்லத்தரசி சம் குவாய் சியோங்கிற்கு சொங் பாங் ஈரச்சந்தைக்குச் செல்வது அன்றாட வழக்கமாக உள்ளது. ஆனாலும் சீனப் புத்தாண்டுக்காக சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை நினைத்தும் கொவிட்-19 கிருமித்தொற்றுள்ள அபாயத்தை எண்ணியும் அவர் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.
“பொருள் வாங்குவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும். எனவே நான் முன்கூட்டியே எழுந்து கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக சந்தைக்குச் செல்வேன்,” என்றார் திருவாட்டி சம், 46.
கடந்த வாரம் சைனாடவுன் காம்ப்ளெசிலுள்ள ஈரச்சந்தையில் பெரும் கூட்டம் திரண்டபோது சில அக்கறைகள் எழுந்தன. சொங் பாங் சிட்டி ஈரச்சந்தை, டெக் கீ கோர்ட் சந்தை, புட் செண்டர் ஆகிய இடங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தித்தது.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க நினைவுறுத்தும் சுவரொட்டிகள், தரையில் வெளிச்சமான சிவப்பு, மஞ்சள் குறியீடுகள் ஆகியவை சொங் பாங் நிலையத்தில் காணப்பட்டன. காலை 7 மணி தடுப்புகள் போடப்படுவதற்கு முன் பொதுமக்கள் எந்த நுழைவாயில் மூலமாகவும் நுழையலாம். ஆனால் அதன் பிறகு ஒரே ஒரு நுழைவாயிலும் வெளிவாயிலும் காணப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு இடைவெளித் தூதுவர்கள் சந்தைக்குள் நுழைபவர்களுக்கு உதவி செய்து வந்தனர்.
தற்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருப்பதாக கடல் உணவுக் கடையை நடத்தும் திரு யாப் சின் லியாங் தெரிவித்தார்.