சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் வட்டாரப் பரிசோதனை நிலையங்களிலும் அன்றாடம் கூடுதலாக 21,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
மீண்டும் பெரிய அளவில் கொரோனா கிருமித்தொற்றைத் தவிர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
இங்குள்ள 41 தங்குவிடுதிகளிலும் 16 வட்டாரப் பரிசோதனை நிலையங்களிலும் ‘பிசிஆர்’ பரிசோதனை மேற்கொள்வதற்கு நிறுவனங்களை நியமிக்க சுகாதார மேம்பாட்டு வாரியம் திட்டமிடுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு கிடைத்த ஆவணங்களில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
உரிமம் பெற்ற ஆய்வகங்களுடன் சேர்ந்து அந்நிறுவனங்கள் பரிசோதனை மாதிரிகளைச் சோதிக்க வேண்டும். அதோடு ‘ஆன்டிஜன்’ விரைவுப் பரிசோதனை மற்றும் ‘செரோலஜி’ பரிசோதனையையும் அவை நடத்த வேண்டும்.
கடந்த வாரம் சராசரியாக நாள்தோறும் 34,000க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டது.
இதுகுறித்து சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் பேச்சாளர் குறிப்பிடுகையில், “கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் கொவிட்-19 பரிசோதனை நடத்த தனியார் மருந்தகங்களுக்கு அனுமதியளிக்க சுகாதார அமைச்சு அதன் பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது.
“அதன் பொருட்டு நமது நிகழ்கால, எதிர்காலப் பரிசோதனை நடவடிக்கைகளுக்குத் துணைநிற்க தனியார் துறை வளங்களைத் திரட்டுவதற்கு இந்தக் குத்தகை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
வாரியம் நியமிக்கும் நிறுவனங்கள் இரு கட்டங்களாக பரிசோதனை நடத்த வேண்டும். முதல் கட்டமாக, இரு வட்டாரப் பரிசோதனை நிலையங்களில் சுமார் 2,500 பேரையும் ஐந்து ஊழியர் தங்குவிடுதிகளில் சுமார் 3,000 பேரையும் அவை பரிசோதிக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக, 14 வட்டாரப் பரிசோதனை நிலையங்களில் 15,000க்கும் அதிகமானோருக்கும் 36 தங்குவிடுதிகளில் 6,000 பேருக்கும் அவை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் இதுவரை 59,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் பெரும்பாலானோர் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.