பள்ளி இணைப்பாட நடவடிக்கையின் ஓர் அங்கமாக கான்கார்ட் தொடக்கப்பள்ளி மாணவி ஒருவர், உயரத்தில் 'ஸிப்லைன்' சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்துவிட்டார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கநிலை நான்கு பயின்ற அந்த மாணவிக்கு இவ்விபத்து நேர்ந்தது.
மருத்துவ சிகிச்சை முதல் மீண்டும் பள்ளி திரும்புவது வரை மாணவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பள்ளி முழு ஆதரவு அளித்ததாகக் கூறப்பட்டது.
அதையடுத்து, உயரத்தில் நடைபெறக்கூடிய அனைத்து பள்ளி சார்ந்த நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
கொவிட்-19 சூழல் கருதி அந்தத் தற்காலிகத் தடை, இவ்வாண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் 'ஸிப்லைன்' நடவடிக்கை கூடுதல் பாதுகாப்புடன் நடைபெற வேண்டும் என்பதற்காக நடப்பில் இருந்த செயல்முறைகளை கல்வி அமைச்சு மறுஆய்வு செய்து மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை இவ்வாண்டு ஜனவரி 5ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது.
இருப்பினும், இவ்வாண்டு மீண்டும் ஓர் அசம்பாவிதம் நடந்தது.
சாஃப்ரா ஈசூனின் உயரமான ஓர் அமைப்பில் பள்ளி முகாம் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 வயது ஆங்கிலோ-சீனப் பள்ளி (தன்னாட்சி) மாணவர் ஜெத்ரோ புவா, தன் கால் பிடியைத் தவறவிட்டார். உடலில் பாதுகாப்புக் கயிறு இருந்தவாறு அந்தரத்தில் தொங்கிய அவர், அப்போதே தன் சுயநினைவை இழந்தார். கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் இறந்துவிட்டார்.
தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் உயரம் சார்ந்த வெளிப்புற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவைத்துவிட்டன.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்தில், கல்வி அமைச்சின் பதிவிலிருந்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் அகற்றப்பட்டதாகவும் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சேவை வழங்கத் தடைசெய்யப்பட்டதாகவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு சம்பவத்தை அடுத்து, 'ஸிப்லைன்' நடவடிக்கையின்போது மேலும் இன்னொரு பயிற்சியாளர் இருப்பது கட்டாயமாக்கப்பட்டது.
பயிற்சியாளர்களுக்கு முறையான சான்றிதழ்கள் உள்ளதைப் பள்ளிகள் உறுதிசெய்த பின்னரே இத்தகைய நடவடிக்கைகளை நடத்துவதற்காக வெளி நிறுவனங்களை நாடவேண்டும்.
தேவை ஏற்பட்டால் நடவடிக்கை நடைபெறும் இடத்தில் மீட்புப் பணி மேற்கொள்ள குறைந்தது ஒருவருக்காவது சான்றளிப்புத் தகுதி இருக்க வேண்டும்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ஒருசில பயிற்சியாளர்களுக்கும் பகுதிநேரப் பணியாளர்களுக்கும் போதிய பயிற்சி இல்லாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

