சிங்டெல் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் 500 நிபுணர்களை வேலையில் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் (ஐஎம்டிஏ), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), சிங்கப்பூர் பலதுறை தொழில்நுட்பக் கழகம் (எஸ்பி) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலை, பயிற்சித் திட்டம் இடம்பெறுகிறது.
இவற்றில், 150 வேலைகள் புதிய 5ஜி இணையச் சேவை தொடர்பான கட்டமைப்பு பொறியியல், மின்னிலக்க சேவைகள், 5ஜி தயாரிப்பு, இயங்குதள மேம்பாடு போன்ற வேலைகளாகும்.
மீதமுள்ளவர்களுக்கு இணையம் வழி தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான கணினிக் கட்டமைப்புகளை உருவாக்குதல், ‘கிளவுட்’ பொறியியல், தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் இணையத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று சிங்டெல் நேற்று தெரிவித்தது.
அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் அதிவேக 5ஜி இணையக் கட்டமைப்பு அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கு தயாராவதற்காக தற்போதுள்ள 2,300 ஊழியர்களை சிங்டெல் நிறுவனம் தக்கவைத்துக்கொள்ளும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி நிபுணத்துவத்தில் 1,000 வேலைகளை உருவாக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் செயல்படுவோம் என்று ஐஎம்டிஏ கடந்த செப்டம்பரில் அறிவித்தது.
இதில் சில வேலைகள் சிங்டெலின் எதிர்கால 500 பணிகளால் நிரப்பப்படும். இதில் புதிய பட்டதாரிகளும், பணியிடைக்கால நிபுணர்களும் இடம்பெறுவர்.
“அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 பேரை வேலையில் அமர்த்தும் சிங்டெலின் திட்டம், தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதில் ஒரு முக்கிய அங்கமாகும். அதேநேரத்தில் ஏற்கெனவே சிங்டெலில் உள்ளவர்கள் திறன் மாற்றமும் முக்கியமானது,” என்றார் தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்.
“அடிப்படையில், ஒட்டுமொத்த சிங்கப்பூர் திறனாளர்களுடனும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.
சிங்டெல் ஊழியர்களுக்கான பயிற்சி சில வாரங்கள் வரையிலான குறுகியகால படிப்பு முதல் ஓராண்டு அல்லது அதற்கும் அதிகமான முழுநேர கல்வித் திட்டங்கள் வரை கொண்டிருக்கும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பலதுறை தொழில்நுட்பக் கழகம் உடனான சிங்டெலின் பங்காளித்துவம் 5ஜி இணையச் சேவை, தொலைத்தொடர்பு ‘புரோகிராம் மானேஜர்’ திட்டத்தின் கீழ் வருகிறது. இது தொழில் துறை பங்காளிகள் 5ஜி இணைய சேவை தொடர்பான பயிற்சி வகுப்புகளை அடையாளம் கண்டு உருவாக்க உதவுகிறது.
மென்பொருள் உருவாக்குநர்கள் போன்ற வேலைகளுக்கான பயிற்சியும் ஐஎம்டிஏவின் ‘டெக்ஸ்கில்ஸ் அசிலரேட்டர்’ (டீஎஸ்ஏ) நிறுவனம் தலைமையிலான பயிற்சித் திட்டங்கள் மூலம் வழங்கப்படும்.
சிங்கப்பூரின் நாடு தழுவிய இரண்டு 5ஜி இணையக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான உரிமைகளை சிங்டெல்லும் ஸ்டார்ஹப், எம்1 இடையேயான பங்காளித்துவமும் வென்றது.
ஐஎம்டிஏவின் விதிமுறைகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டின் இறுதியில் குறைந்தது சிங்கப்பூரின் பாதி பகுதிக்கும் 5ஜி தொலைபேசி கட்டமைப்பு வசதியை வழங்க வேண்டும். 2025 ஆண்டுக்குள் நாடு தழுவிய அளவில் இச்சேவை வழங்கப்பட வேண்டும்.