என்டியுசி இன்கம் ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு காப்புறுதித் திட்டம் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் மருத்துவமனைக் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்தும் முறை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த அணுகுமுறையை மற்ற காப்புறுதி நிறுவனங்களும் பின்பற்றக்கூடும்.
மருத்துவமனைக் கட்டணத்தைக் காப்புறுதி நிறுவனங்கள் முழுமையாக செலுத்தும் முறை கூடிய விரைவில் இல்லாமல் போகலாம்.
மருத்துவமனைக் கட்டணத்தை என்டியுசி இன்கம் முழுமையாக செலுத்தும் திட்டத்தை முன்பு தேர்ந்தெடுத்தவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதி ஷீல்டு திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டவுடன் மருத்துவமனைக் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
இதுகுறித்து இம்மாதம் 3ஆம் தேதியிலிருந்தது தனது வாடிக்கையாளர்களிடம் என்டியுசி இன்கம் தெரிவித்து வருகிறது.
தேவை ஏற்பட்டால் மட்டுமே சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்தவும் அதன் விளைவாக காப்புறுதித் திட்டங்களுக்கான சந்தா தொகையை கட்டுப்படியான விலையில் வைத்திருக்கவும் இந்த அணுகுமுறை ஊக்குவிக்கும் என்று என்டியுசி இன்கம் கூறியது.
மருத்துவமனைக் கட்டணத்தில் குறைந்தது ஐந்து விழுக்காட்டுத் தொகை இந்த வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் என்டியுசி இன்கம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
காப்புறுதித் திட்டம், வாடிக்கையாளரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சந்தா தொகை 50 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று என்டியுசி இன்கம் கூறியது.
மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய அணுகுமுறை ஒராண்டு கழித்து தொடங்கும்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டத்தில் சேருபவர்களுக்கு மருத்துவமனைக் கட்டணத்தைக் காப்புறுதி நிறுவனங்கள் முழுமையாக செலுத்தும் தெரிவு வழங்கப்பட்டது.
ஆனால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்தத் தெரிவு வழங்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு முன்பு அந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அந்த அனுகூலம் தொடர்ந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், அத்திட்டத்தை வைத்திருக்கும் ஏறத்தாழ 160,000 வாடிக்கையாளர்கள் இனி தங்கள் மருத்துவமனைக் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்த வேண்டும் என்று என்டியுசி இன்கம் முடிவெடுத்துள்ளது.