தனியார் துறையிலும் அரசாங்கம் சார்ந்த அமைப்புகளிலும் வேலை அனுபவம் கொண்ட 48 வயது திரு வெங்கடேஷ் நாயுடு, மக்களுக்கு சேவையாற்றும் பணியில் அதிகம் கவனம் செலுத்துபவர்.
‘கிரேப்’ (Grab) நிறுவனத்தில் பணியாற்றும்போது, வாடிக்கையாளர்களை வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தி, அவர்களின் குணாதியசங்களையும் தேவைகளையும் அறிந்து, அதன்படி தரமான சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டார்.
தகவல்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என்பதையும் அவர் கற்றுக்கொண்டார்.கற்றுக்கொண்ட விஷயங்களை இன்று தமது வேலையில் அவர் நடைமுறைப்படுத்துகிறார்.
திரு வெங்கடேஷ் ‘அவர் தெம்பனிஸ்’ மையத்தில் (Our Tampines Hub) பொதுச் சேவை நிலையத்தின் துணை இயக்கு நராக பணியாற்றுகிறார்.
வெவ்வேறு அரசாங்க அமைப்பு களுக்குச் சென்று உதவி நாடும் குடியிருப்பாளர்களை ஒரே இடத்தில் அச்சேவைகளை பெறச் செய்யும் வசதியை இந்நிலையம் வழங்குகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், ‘ஆக்டிவ்எஸ்ஜி’ (ActiveSG), மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளின் சேவைகளை இந்நிலையத்தில் நாடலாம்.
ஆனால் சில வேளைகளில் குடியிருப்பாளர்களின் தேவைகள் கூடுதலாக இருக்கும். மேற்கொண்டு மற்ற அரசாங்க அமைப்புகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டியதாக இருக்கும்.
உதாரணத்திற்கு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுக் கட்டணம் குறித்து அந்நிலையத்திற்கு உதவி தேடி வரும் ஒருவர், அதன் தொடர்பில் மத்திய சேமநிதி கழகத்துக்கும் செல்ல வேண்டியிருக்கும். இதற்காக அந்நபர் ஒரு நாளில் இரு இடங்களுக்கு செல்லக்கூடும்.
குடியிருப்பாளர்களின் வசதிக்காக ஏன் மத்திய சேமநிதிச் சேவையையும் இந்நிலையத்தில் வழங்கிடக்கூடாது? போன்ற யோசனை திரு வெங்கடேஷுக்கு வர, நாளடைவில் கூடுதல் அரசாங்க சேவைகள் இந்நிலையத்தில் இடம்பெற்றன.
இன்றோ மத்திய சேமநிதிக் கழகம், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், தேசிய சுற்றுப்புற வாரியம் என 15 அமைப்பு களின் 300க்கும் மேற்பட்ட சேவைகள் பொதுச் சேவை நிலையத்தில் வழங்கப்படுகின்றன.
குடிமக்களுக்கு வழங்கும் சேவைகளை எப்படி மேம்படுத்தலாம் என்ற நோக்கில் குடியிருப்பாளர்களின் கருத்துகளை சேகரித்து, ஆய்வுகள் மேற்கொண்டு, தொழில்நுட்பத் தகவல்களை ஆராய்ந்து, முன்னிலை அதிகாரி களிடம் எப்படி புதிய சேவைகளை வழங்குவது குறித்த பயிற்சியும் கொடுத்ததில் இது சாத்தியமானது.
அப்படி ஒருவேளை நிலையத்தின் அதிகாரியால் ஒரு குறிப்பிட்ட குடியிருப்பாளரின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், அது தொடர்பான அமைப்பின் அதிகாரியிடம் ஒரு தனி அறையில் காணொளி வழி ஆலோசனை பெறும் சேவையும் இந்நிலையத்தில் உள்ளது. இது அந்த அமைப்புக்கு குடியிருப்பாளர் நேரடியாகச் செல்லாமல் சேவை யைப் பெறுவதால் அவரது நேரமும் மிச்சமாகிறது.
“முதியவர் ஒருவர் குறிப்பிட்ட உதவிக்காக எங்களிடம் வந்திருக்கலாம். ஆனால் அவர் ‘சாஸ்’ சலுகை அட்டைக்கு விண்ணப்பித்து விட்டாரா, பொதுப் போக்கு வரத்து பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து விட்டாரா அல்லது மளிகைப் பொருட்கள் வாங்கும் பற்றுச்சீட்டுகளுக்கு தகுதி உள்ள வரா என அவர் பயன்பெறக்கூடிய அரசாங்க அனுகூலங்களைப் பற்றி விளக்கி விண்ணப்பித்தும் தருகிறோம். எதிர்பாராத உதவியுடன் மக்கள் திருப்தியுடன் வீடு திரும்புகின்றனர்,” என்றார் இந்நிலையத்தை 15 முன்னிலை அதிகாரி களைக் கொண்டு வழிநடத்த உதவும் திரு வெங்கடேஷ்.
தனியார் துறையில் பெற்ற திறன்களைக் கொண்டு குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த முடிந்ததில் திரு வெங்கடேஷ் மிகுந்த மனநிறைவு அடைகிறார்.
“கொவிட்-19 கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து உதவி நாடி வந்த பல சிங்கப்பூரர்களுக்கு ஒரே கூரையில் அனைத்து உதவிகளையும் புரிந்து வருகிறோம். அதிகரித்த வேலை என்றாலும் தனிநபர்களுக்கு முழுமையான வகையில் உதவ முடிவது மிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று நிலைய முன்நிலை அதிகாரிகள் கருதுகின்றனர்,” என்றார் தொடர்ந்து புத்தாக்கத் தீர்வுகளை கண்டறிந்து நிலைய சேவைகளை மேம்படுத்த விரும்பும் திரு வெங்கடேஷ்.