சீனாவில் செயல்படும் சிங்கப்பூர் வர்த்தக சபை, இரு நாடுகளுக்கும் இடையில் சமூக, பொருளியல் உறவைப் பலப்படுத்துவதில் தீவிரமான, முக்கியமான பங்காற்றுவதாக வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று சென்ற ஆண்டில் பரவத் தொடங்கியபோது நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அந்தச் சபை நிதி திரட்டி உதவியதை கலாசார, சமூக இளையர் துறை துணை அமைச்சருமான அவர் சுட்டினார்.
அந்தச் சபையும் பெய்ஜிங்கில் செயல்படும் சிங்கப்பூர் தூதரகமும் 'சிங்கப்பூர் குளோபல் நெட்வொர்க்' என்ற அமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்து 'ஸூம்' வழி நடந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அமைச்சர் மண்டரின் மொழியில் பேசினார்.
அதில் 200 பேர் கலந்துகொண்டனர்.
சீன அரசுடன் தொடர்பு கொண்டு சிங்கப்பூர் நிறுவனங்களின் நலன்களைப் பேணவும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் சீன தொழிலதிபர்களுடன் தொழில், வர்த்தகக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவவும் சீனாவில் 2002ஆம் ஆண்டில் அந்தச் சபை அமைக்கப்பட்டது.
கொவிட்-19 தலைகாட்டத் தொடங்கியது முதலே சிங்கப்பூரும் சீனாவும் அணுக்க தொடர்பைக் கட்டிக்காத்து வந்ததாக அமைச்சர் கூறினார்.
கிருமித்தொற்றைச் சமாளிக்க ஒன்று மற்றொன்றுக்கு உதவியதாகத் தெரிவித்த அமைச்சர், அதே நேரத்தில் இருநாடுகளும் பொருளியல், வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.