தஞ்சோங் பகாரில் சனிக்கிழமை ஐவர் மாண்ட விபத்து நிகழ்ந்த இடத்தில் பூக்களும் உடைகளும் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருந்தன. இரங்கல் கடிதம் ஒன்றும் காணப்பட்டது.
அந்த ஐந்து பேரும் சென்ற பிஎம்டபிள்யூ கார் அங்குள்ள கடைவீடு ஒன்றில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.
விபத்தில் சிக்கியவர்கள் 'ஏவிவா ஃபைனான்ஷியல் அட்வைசர்ஸ்' என்ற நிறுவனத்தின் பிரமுகர்களாக முன்பு பணியாற்றினர். மரணமடைந்த ஐவரில் நான்கு பேர் அந்த நிறுவனத்தில் முன்பு நிதித்துறை ஆலோசகர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவரான ஜொனாத்தன் லோங் என்பவர் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்ததாக நம்பப்படுகிறது.
திரு வோங்கின் காதலியான குமாரி ரேபி ஒ சியூ ஹுவே, 26, இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தன் காதலரைக் காப்பாற்ற முயன்றபோது படுமோசமாக தீப்புண் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரியவந்தது.
அந்தப் பெண் முன்பு ஏவிவா நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு விமான சிப்பந்தியாக வேலை பார்த்தார். விபத்து நிகழ்ந்தது முதலே நண்பர்களும் குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்ததை அடுத்து தஞ்சோங் பகாரில் அமலாக்க நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேம்படுத்துவது பற்றி தான் ஆராய்ந்து வருவதாக போக்குவரத்து போலிஸ் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இவ்வேளையில், கார் விபத்து நிகழ்ந்த கடைவீட்டுக் கட்டடம் கட்டுமான ரீதியில் பாதிக்கப்படவில்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, அந்தப் பகுதியில் நிலவரங்களை மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பது பற்றி ஆராயும்படி தான் போக்குவரத்து போலிசாரை கேட்டுக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதில் படச்சாதனங்கள், வேகத் தடைகளைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று தெரிவித்த அமைச்சர், போக்குவரத்து போலிஸ் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டி இருக்கும் என்றும் என்னென்ன செய்யலாம் என்பதை அந்த இரண்டு அமைப்புகளும் கண்டறியும் என்றும் கூறினார்.
அமலாக்க நடவடிக்கைகளை 24 மணி நேரமும் நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமம் என்ற அவர், வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு செய்தி விடுத்தார்.
"வாகனத்தை பந்தயம் விடுவதுபோல் வேகமாக ஓட்டிச் செல்லாதீர். அப்படி செல்வதால் ஏற்படக்கூடிய தொடர் விளைவுகள் நீண்ட நெடுநாட்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.