மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையம் கடந்த வாரம் தொகுத்து வழங்கிய ‘இன் கான்வர்சேஷன் வித்’ என்னும் பிரத்தியேக நிகழ்ச்சியில் வளர்ந்துவரும் ‘ராப்’ இசைக் கலைஞர் யங் ராஜா கலந்துகொண்டு கலைஞராக தமது பயணத்தைப் பற்றி இளையர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
‘யூனிவர்சல் மியூசிக்’ குழுமத்தால் உலகளவில் விளம்பரப்படுத்தப்படும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமைக்குரிய உள்ளூர் நட்சத்திரக் கலைஞரான இவர், நடிகர், பாடலாசிரியர், சொல்லிசைக் கலைஞராக பல பரிமாணங்களில் தாம் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ‘கேர் சிங்கப்பூர்’, சமூக நிறுவனமான ‘கிளிஃப்’, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறக்குறைய 40 இளையர்கள் பங்கேற்று யங் ராஜாவுடன் உரையாடினர்.
பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு மிக யதார்த்தமான முறையில் பதிலளித்து அவர்களை உற்சாகப்படுத்தினார் யங் ராஜா.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 வயது ஈசன் நவீன், யங் ராஜாவின் தீவிர ரசிகர்.
வருங்காலத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இவருக்கு யங் ராஜாவின் கலைப் பயணம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக இவர் கூறினார்.
“யங் ராஜா எனக்கு மிகவும் பிடித்த சொல்லிசைக் கலைஞர். அவர் இந்நிகழ்ச்சியில் கூறிய ஒவ்வொரு அறிவுரையையும் எனது வாழ்க்கையில் செயல்படுத்த விரும்புகிறேன்.
“ஆர்வம், திறன் மட்டும் இருந்தால் போதாது. இலக்கை எட்ட கடின உழைப்பும் நேர்மறை சிந்தனையும் தேவை என்று அவர் கூறிய வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின,” என்றார் நவீன்.
யங் ராஜாவின் வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கேட்டறிந்த இளையர்களில் ‘கிளிஃப்’ அமைப்பைச் சேர்ந்த 13 வயது ஏஞ்சலினா தையல்நாயகியும் ஒருவர்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எவ்வாறு சரளமாக பாட முடிகிறது என்று அவர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த யங் ராஜா, வீட்டில் குடும்பத்துடன் தமிழிலும் வெளியே நண்பர்களுடன் ஆங்கிலத்திலும் தாம் உரையாடுவதே இருமொழி ஆற்றலுக்கான காரணங்களில் ஒன்று என்றார்.
தாய்மொழியைக் கூச்சம் இல்லாமல் தைரியமாக பேசப் பழகுமாறும் இளையர்களை இவர் ஊக்குவித்தார்.
“எனது கலைப் பயணத்தை இளையர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய மரியாதையாகக் கருதுகிறேன்.
“இளையர்களுடன் உரையாடியது புதுமையான அனுபவமாக அமைந்தது. இளையர்கள் தைரியமாக முன்வந்து பல நல்ல கேள்விகள் கேட்பதைப் பார்த்து எனக்குள்ளேயே ஒருவித உத்வேகம் பிறந்திருக்கிறது,” என்றார் யங் ராஜா.