சிங்கப்பூரின் ஒட்டுமொத்த சரக்கு வர்த்தகம் 2021 முழு ஆண்டிற்கும் 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வர்த்தகம் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை கூடும் என்று கடந்த நவம்பரில் முன்னுரைக்கப்பட்டு இருந்தது.
எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் எண்ணெய் மற்றும் மொத்த வர்த்தகம் அதிகமாகும் என்று கணக்கிடப்படுகிறது.
இருந்தாலும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 0 விழுக்காட்டில் இருந்து 2% வரைதான் கூடும் என்று கணிக்கப்படுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் என்ற அரசாங்க அமைப்பு தனது வர்த்தகச் செயல்திறன் மறுபரிசீலனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள், 2020ல் 4.3% கூடின. மின்னணு மற்றும் மின்னணு சாராத உற்பத்திப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியானதே இதற்குக் காரணம். இவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் முந்தைய ஆண்டில் 9.2 விழுக்காடு குறைந்திருந்தன.
மொத்த சரக்கு வர்த்தகம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2020ல் 5.2% குறைந்த போதிலும் சென்ற ஆண்டில் அவற்றின் ஏற்றுமதிகள் கூடின.
மொத்த வர்த்தகம் சென்ற ஆண்டில் $969 பில்லியனைத் தொட்டது. ஏற்றுமதிகள் இறக்குமதிகள் இரண்டும் குறைந்தன.
எண்ணெய் வர்த்தகம் சென்ற ஆண்டில் 31% குறைந்தது. இதுவே இந்த ஒட்டுமொத்த வர்த்தகக் குறைவுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய் வர்த்தகம் 2019 ஆம் ஆண்டிலும் 13.9 விழுக்காடு குறைந்தது.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் 5.1 விழுக்காடு குறைந்தது.
எண்ணெய் சாராத வர்த்தகம் கூடியது என்றாலும் எண்ணெய் வர்த்தகம் அதிகமாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முழு விவரம் நாளைய அச்சுப்பிரதியில்