உள்ளூர் பெருநிறுவனங்கள், தங்களது வளர்ச்சிக்காக உருமாறுவதற்கும் விரிவடைவதற்கும், பிற நிறுவனங்களுக்கு பங்குகளின் மூலம் ஆதரவு நல்கும் (நிதி) நிறுவனங்களுடன் அரசாங்கம் செயலாற்றும் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.
இதுவரையிலான திட்டங்களில், 100 மில்லியன் வெள்ளி வரையிலான வருவாயைக் கொண்டுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மீது பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வந்ததாகத் திரு ஹெங் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய தமது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார். பங்கு மூலமாக முதலீடு செய்பவர்களின் கவனத்தை இத்தகைய நிறுவனங்கள் வழக்கமாக அவ்வளவு ஈர்ப்பதில்லை என்று திரு ஹெங் கூறினார். அத்துடன், தங்களுக்கான மூலதனத்தைப் புரட்டுவதில் பெருநிறுவனங்களுக்கு வழக்கமான சூழலில் சிரமம் இருக்காது.
ஆயினும் உலகப் பொருளியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தனியார் பங்குகளின் மூலம் மூலதனத்தைத் திரட்டுவது உள்ளூர் பெரும் நிறுவனங்களுக்குச் சிரமமாக இருப்பதைத் திரு ஹெங் சுட்டினார். இதனால் இந்நிறுவனங்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த இயலாமல் பாதிக்கப்படலாம் என்றார் திரு ஹெங். இந்நிறுவனங்களுக்கு கைகொடுக்க வரவு செலவுத் திட்டம், 500 மில்லியன் வெள்ளியை ஒதுக்கும் என்றும் அரசாங்கம், தெமாசிக் நிறுவனத்துடன் உள்ளூர் வர்த்தக நிதியாதரவுத் தளத்தில் இந்தப் பணத்தை முதலீடு செய்யும் என்றும் இவர் அறிவித்தார். அரசாங்கம் கொடுக்கும் அதே தொகையை தெமாசிக் நிறுவனமும் தருவதால் இத்தளத்தில் மொத்தம் 1 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும்.