நீண்ட கால உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்க 90 பில்லியன் வெள்ளி வரை மதிப்பிலான புதிய கடன்முறிகளை அரசாங்கம் வழங்க உள்ளது. தற்போதைய தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கு அனுகூலம் பயக்கும் இந்த முறிகளின் தொடர்பிலான மசோதா ஒன்று இவ்வாண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு அரசாங்கத்திட்டத்தின்படி, இந்தக் கடன்முறிகள், பெரிய, நீண்டகால உள்கட்டமைப்புக்கான நிதியைச் சேர்க்க வகைசெய்யும். அத்துடன் அவை உள்நாட்டு கடன் சந்தையை மேம்படுத்துவதுடன் மத்திய சேமநிதியத்தின் மூலம் சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படும்.
இத்தகைய முறிகளின் மூலம் நிதியாதரவு பொறுப்பு நியாயமாகவும் செயல்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பிரிக்கப்படுவதை உறுதி செய்யும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் தெரிவித்தார்.
“மேம்பட்ட உள்கட்டமைப்பால் நேரடியாகப் பயனடையப்போகும் தலைமுறைகள் இதற்கான கட்டணங்களை ஏற்பதால் இவை நியாயமானவை. தற்போதுள்ள குறைந்த வட்டி விகிதச் சூழலின் மூலம் பயனடைய இத்தகைய முறிகள் உதவுவதால் இவை செயல்திறன் மிக்கவை,” என்று இவர் கூறினார்.
கடன்முறிகளைப் பற்றி முன்மொழிவு அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் விளக்கப்பட்டதாகவும் அந்தத் திட்டத்திற்கு அவர் உடன்பட்டதாகவும் திரு ஹெங் கூறினார். இந்தப் புதிய கடன் முறிகளிலிருந்து பெறப்படும் தொகை, பெரிய முன்பணச் செலவில் கட்டப்படும் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்குப் பயன்படும். குறுக்கு ரயில்பாதை, ஜூரோங் ரயில் பாதை உள்ளிட்ட புதிய பாதைகள் இதில் அடங்கும். அத்துடன், எரிபொருள் நிலையங்கள், உயரும் கடல் நீர்மட்டத்திலிருந்து சிங்கப்பூரைக் காப்பாற்றுவதற்கான சுவர்கள் போன்ற திட்டங்களுக்கும் இந்த முறிகள் கைகொடுக்கும்.
பருவநிலை மாற்றம் தொடர்பிலான உள்கட்டமைப்புக்கான சில ‘பச்சை முறிகளை’ வழங்குவதற்கான திட்டங்களும் உள்ளன.