சிங்கப்பூரில் பெட்ரோல் விலை நேற்று முதல் உயர்ந்தது. அந்த விலை உயர்வைப் பற்றி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் நேற்று வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி முதல்ரக பெட்ரோல் விலை, அதில் கலந்துள்ள கரிம அளவைப் பொறுத்து 1 லிட்டருக்கு 15 காசு முதல் 79 காசு வரை உயர்ந்தது. நடுத்தர ரக பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 10 காசு முதல் 66 காசு வரை கூடியது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையைக் கைகொள்ள சிங்கப்பூர் பெரிய அளவில் முயன்று வருகிறது.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக பெட்ரோல் வாகனப் பயனீட்டை மக்கள் குறைத்துக்கொள்ள ஊக்கமூட்டும் வகையில் விலை உயர்வு இடம்பெறுகிறது.
விலை உயர்வு காரணமாக கூடும் செலவைச் சமாளிக்க உதவும் வகையில் வாகன உரிமையாளர்களுக்குச் சாலை வரி மற்றும் கூடுதல் பெட்ரோல் தீர்வை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பெட்ரோல் விலை இதற்கு முன் 2015ல் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-மின்சார வாகனங்களுக்குத் தள்ளுபடிகளை வழங்குவதற்காக ஏறக்குறைய $113 மில்லியன் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

