உற்பத்தித்துறை அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தனது ஊழியர் அணியில் 18 விழுக்காடு எஸ் பாஸ் வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே கொண்டிருக்கும். தற்போது அது 20 விழுக்காடாக உள்ளது. 2023 ஜனவரி 1 முதல் அது மேலும் குறைக்கப்பட்டு 15 விழுக்காடாக இருக்கும்.
அதன் பின்னர் ஒர்க் பெர்மிட், எஸ்-பாஸ் ஊழியர்களுக்கான ஒட்டு மொத்த ஒதுக்கீடு 60 விழுக்காடாகத் தொடரும்.
எஸ்-பாஸ் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் $2,500 என்பதோடு அவர்களின் கல்வித்தகுதி தொழில்நுட்பர்களைப்போல பட்டம் அல்லது பட்டயம் (டிப்ளோமா) வைத்திருக்கவேண்டும்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் சார்ந்திருப்பைக் குறைக்கும் அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
அதேநேரம் சிங்கப்பூரர்களின் வேலைவாய்ப்பை அரசாங்கம் ஆதரிக்கும். வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை உள்ளூர் ஊழியர்கள் பெறும் வகையில் திறன்களை மேம்படுத்தவும் அரசாங்கம் உதவும் என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர் சார்புநிலை குறித்தும் அவர்களால் போட்டி உருவாவது குறித்தும் சிங்கப்பூர்கள் கவலைப்படுவதை திரு ஹெங் ஒப்புக்கொண்டார்.
அதேநேரம், உள்ளூர் ஊழியர்களை வேலையில் அமர்த்துவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் உலகளவில் போட்டித்தன்மையுடன் நீடிக்க வெளிநாட்டு ஊழியர் வரம்பைக் கடுமையாக்கக் கூடாது என்றும் பல்வேறு தொழில்துறையும் வர்த்தகச் சங்கங்களும் தெரிவித்துள்ளன. அது குறித்து திரு ஹெங் தமது உரையில் குறிப்பிடும்போது, "நாம் எடுக்கும் முயற்சிகள் வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்த அளவு இருப்பார்களா, முழுமையாக இருக்க மாட்டார்களா அல்லது அதிகமாக வருவார்களா என்பவற்றை நோக்கியதல்ல.
"இந்த சிறிய தீவு எந்த அளவுக்குத் தாங்கும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சமநிலையைக் கடைப்பிடிக்க, உள்ளூர், வெளிநாட்டு மனிதவளம் நிரப்பப்படுவதில் கவனம் செலுத்தி அதன் மூலம் தொழில்துறை உருமாற்றத்திற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்," என்றார்.
உற்பத்தித்துறையில் சுமார் 450,000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இது மொத்த ஊழியர் அணியில் சுமார் 12 விழுக்காடு.

