இருப்பிடம் ஏதுமில்லாத முகம்மது ரோஸ்லி அப்துல் ரஹிம், கீழ்த்தளங்களிலும் வீடுகளுக்கு வெளியிலும் தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு அறிமுகமில்லாத முகம்மது ரோஸ்லான் ஸாய்னி, 35, ரோஸ்லியை அணுகி, தாம் தங்கியிருக்கும் வீட்டில் இடமளிக்க விரும்புவதாகவும் வீட்டு வாடகையில் பாதியை ரோஸ்லி செலுத்தினால் போதும் என்றும் கூறினார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் இருவரும் தங்களின் பெயர்களை இணை-வாடகைதாரர்களாகப் பதிவு செய்துகொண்டனர்.
ஆனால், சில மாதங்களுக்குப் பின் ரோஸ்லான் தன்னிடம் கூடுதல் வாடகைப் பணத்தை வசூலிப்பதாக சந்தேகப்பட்டார் ரோஸ்லி.
வாடகை மற்றும் வீட்டின் பயனீட்டுக் கட்டணங்கள் தொடர்பாக ரோஸ்லானுடன் ஆகஸ்ட் 16, 2017ல் வாக்குவாதம் செய்ய, அது உயிரைப் பறிக்கும் கத்திக்குத்துச் சம்பவமாக மாறியது.
ரோஸ்லியின் கொலை வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. ரோஸ்லானின் இதயத்தைத் தைக்கும் அளவுக்கு சுமார் 13 சென்டிமீட்டர் ஆழத்துக்கு ரோஸ்லி கத்தியால் குத்தியது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக அரசுத்தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், இறந்தவரின் வலது தொடையிலும் வலது கையிலும் குத்தியதுடன் மேல்முதுகு, வலது கை, கட்டைவிரல்கள் ஆகியவற்றில் பல வெட்டுக் காயங்களை ரோஸ்லி இழைத்தார்.
வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் இருவருடன் இரண்டு ஆடவர்களும் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது பணம் தொடர்பான வாக்குவாதம் எழுந்ததாகவும் இறந்தவர் கூறிய சொற்களைக் கேட்டு ஆத்திரமடைந்த ரோஸ்லி, சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 51 வயதுடைய ரோஸ்லி மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.