தவறுதலாக அகற்றப்பட்ட கிராஞ்சி வனப்பகுதிகள்; விசாரிக்கிறது தேசிய பூங்காக் கழகம்

தவறுதலாக அகற்றப்பட்ட கிராஞ்சி வனப்பகுதிகள்; விசாரிக்கிறது தேசிய பூங்காக் கழகம்

2 mins read
979009b1-b3dc-46df-8b40-6eef928ab18b
2019ஆம் ஆண்டு மே மாதத்தில் எடுக்கப்பட்ட படமும் (இடது) 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்பட்ட படமும். படங்கள்: BRICE LI/FACEBOOK -
multi-img1 of 2

ரயில் பாதை அருகில் அமைந்துள்ள இரு பெரும் கிராஞ்சி வனப்பகுதிகள் தவறுதலாக அகற்றப்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அவ்விடத்தில் பல்லுயிரியல் தாக்கத்தின் மதிப்பீடுகளை மேற்கொண்டு வந்ததற்கு இடையே இத்தவறு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் 40 பறவை வகைகளுக்கு இருப்பிடமாக விளங்கும் 70 ஹெக்டர் பசுமை பரப்பளவு அழிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் படங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று சமூக ஊடகங்களில் வலம்வந்ததை அடுத்து இயற்கை ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

சுற்றுப்புற மதிப்பீடுகள் முடிவடைவதற்கு முன்னதாக அப்பகுதியில் பணிகளை மேற்கொண்டிருந்த குத்தகையாளர் தவறுதலாக வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகொடிகளை அப்புறப்படுத்திவிட்டார் என்று ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் (ஜேடிசி) பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு அந்த நிலத்தின் மரங்கள், செடிகொடிகளை அனுமதியின்றி அகற்றியது குறித்துக் கழகம் விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் முக்கியமான இயற்கைப் பகுதிகளுக்கு அருகில் நடைபெறும் மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுவாகவே கூடுதலாக ஆராயப்படும். அதனால் சுற்றுப்புற ஆய்வுகளை ஆழ்ந்து மேற்கொள்வது கட்டாயமாகும்.

சுங்கை காடுட் சுற்றுச்சூழல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண்-உணவு புத்தாக்க பேட்டையை உருவாக்கும் பணிகளுக்காக இத்தளத்தில் அமைந்துள்ள பசுமைப்பகுதிகள் சென்ற டிசம்பர் மாத இறுதியிலிருந்தே அகற்றப்பட்டு வந்தன.

வேளாண்-தொழில்நுட்பம், சுற்றுப்புறத் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் புதிய பிரிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இப்பெருந்திட்டம் இருக்கும் என்று சென்ற பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜனவரி 13ஆம் தேதியன்று தளத்தைப் பார்வையிடச் சென்றபோது தவறு நேர்ந்திருப்பது தெரிய வந்தது. அனைத்து அப்புறப்படுத்தும் பணிகளையும் குத்தகையாளரான 'ஹுவாடியோங்' நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜேடிசி உத்தரவு இட்டது.

அதையடுத்து, அக்குறிப்பிட்ட வனப்பகுதியில் மேற்கொண்டு எவ்வித அப்புறப்படுத்தும் பணிகளும் நடக்கவில்லை என்றது ஜேடிசி. அத்துடன் குத்தகையாளருக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்ததாகக் கூறப்பட்டது.

திட்டமிட்டபடி சுங்கை காடுட் பசுமைப் பெருந்திட்டத்தின் மறுமேம்பாட்டுப் பணிகள் ஆலோசனை அடிப்படையில் நடந்தேறுவதுடன் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு பொறுப்பான முறையில் நடப்பதை ஜேடிசி உறுதிசெய்யும் என்றார் பேச்சாளர்.