தஞ்சோங் பகார் ரோட்டில் பிப்ரவரி 13 அன்று நிகழ்ந்த விபத்தின் தொடர்பிலான காணொளி வெளியாகியுள்ளது.
அந்த பிஎம்டபள்யூ கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் வேளையில், ஓர் இளம்பெண் அந்த காரை நோக்கி ஓடுவதையும் தீயையும் பொருட்படுத்தாமல் காருக்கு அருகில் செல்வதையும் காணொளியில் காண முடிந்தது.
அந்த காரை ஓட்டிச் சென்ற திரு ஜொனத்தன் லோங்கின் காதலியான திருவாட்டி ரேபி ஓ சியூ ஹுவே அவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 5.40 மணியளவில் சாலையில், வேகமாக வந்த பிஎம்டபள்யூ எம்4 கார் சுமார் 2 வினாடிகளுக்கு சாலையில் சறுக்கிச் சென்றதைக் காணொளி காட்டியது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ஒரு சுற்று சுற்றி, சற்று தள்ளியிருந்த கடைவீடு ஒன்றின் மீது மோதுவதைக் காண முடிந்தது.
தீப்பிழம்பாக வெடிப்பதற்கு முன்பு அந்த காரின் சைகை விளக்குகள் சுமார் 15 வினாடிகளுக்கு ‘சிமிட்டுவதை’க் காணொளி காட்டியது.
சுமார் 20 வினாடிகளுக்குப் பிறகு திருவாட்டி ரேபி ஓ சியூ ஹுவே அந்த காணொளியில் காணப்படுகிறார்.
காரை நோக்கி ஓடியதுடன் தீ நாக்குகளிடையே விரைந்து செல்கிறார். கிட்டத்தட்ட 10 வினாடிகளுக்குப் பிறகு தீ சூழ்ந்த திருவாட்டி ஓ, சாலையின் எதிர்ப்புறம் இருக்கும் கடை வீடு ஒன்றை நோக்கி ஓடுவதை காணொளியில் காண முடிகிறது.
சற்று நேரத்துக்குப் பிறகு ஒரு வெள்ளை நிற காரின் ஓட்டுநரும் வேறொரு பெண்ணும் திருவாட்டி ஓவின் மீது பற்றிய தீயை அணைக்க உதவுவதையும் காணொளி காட்டுகிறது.
உடலில் சுமார் 80% தீக்காயங்களுடன் திருவாட்டி ஓ, 26, இன்னும் கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழு, சம்பவத்தின் தொடர்பில், காலை 5.24 முதல் 5.50 வரையிலான சம்பவங்களைக் காட்டும் 6 காணொளிகளைப் பார்த்தது. அதில், அந்த பிஎம்டபள்யூ கார் அ தே சாலையில் மூன்று முறை சென்றதையும் நான்காவது முறை செல்ல்லும்போது கட்டுப்பாட்டை இழந்ததையும் கண்டுபிடித்தது. ஆனால், முதல் மூன்று முறைகளில் அந்த கார் மெதுவாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.