சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர், தடுப்பூசி போடுவதற்கான அழைப்புக் கடிதத்தைப் பெறாவிட்டாலும் preregister.vaccine.gov.sg என்ற இணையப்பக்கத்தில் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்து ஊசி போட முன்பதிவு செய்துகொள்ளலாம்.
“தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு நேரம் பற்றிய விவரங்கள் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு படிப்படியாக அனுப்பப்படுகின்றன. உங்களது விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள். இணையம் வழியாக முன்பதிவு செய்வது குறித்து தங்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரியப்படுத்துவோம்,” என அந்த இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள், பதிவு செய்ய விரும்பினால் சமூக நிலையத்தையோ அல்லது சுகாதார அமைச்சின் கொவிட்-19 நேரடி அழைப்பு தொலைபேசி எண்ணையோ (1800-333-999) அழைக்கலாம்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கும் கடிதங்கள் மூத்தோருக்குத் தொகுப்புகளாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் இருக்கும் 10 இலக்க எண்ணைப் பயன்படுத்தித்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும். அழைப்புக் கடிதம் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை அறிய 1800-333-999 என்ற எண்ணில் மூத்தோர் தொடர்புகொள்ளலாம்.
சிங்கப்பூரில் வசிக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அது இலவசம். கடுமையான ஒவ்வாமை விளைவுகள் கொண்டிருப்போரும் நோயெதிர்ப்பாற்றல் குறைவானவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்பது பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.
இணையப்பக்கத்தில் பதிவு செய்வோருக்கு...
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விருப்பத்தை இணையப் பக்கத்தில் பதிவு செய்வோருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் கொடுக்கப்படும் இணைப்பின் வழியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யமுடியும்.
அந்த இணைப்பில் தங்களது பிறந்த தேதி, அடையாள அட்டை எண் போன்றவற்றை உள்ளிட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நிலையத்தையும் தடுப்பூசியின் 2 தவணைகளைப் போட்டுக்கொள்வதற்காக 21 முதல் 28 நாட்கள் இடைவெளியுடன் இரண்டு தேதிகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சிங்கப்பூரில் இதுவரை 250,000க்கும் மேற்பட்டோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியும் 55,000 பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.