கடந்த 12 வருடங்களாக, சமைத்த உணவுக் கடைகளில் மேலாளராக இருக்கிறார் திரு ஷாஹுல் ஹமீது, 40. தற்பொழுது எட்டு சமைத்த உணவுக்கடைகளை நிர்வகிக்கும் அவரின் நிறுவனத்தில், பிரதானமாக உள்ளது, புளோக் 155, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11-இல் உள்ள அல் மதினா செயின் ஸ்டோர்ஸ் உணவகமாகும். புக்கிட் பாஞ்சாங்கிலும் அவரது நிறுவனத்தின் இரு கிளை உணவகங்கள் சிறப்பாக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் அங் மோ கியோ, பாண்டான் கார்டன்ஸ் ஆகிய இடங்களிலும் அவர் கடைகளை நடத்திவந்துள்ளார். இந்த புக்கிட் பாத்தோக் உணவகம் கடந்த 6 வருடங்களாக செயல்பட்டுவருகின்றது. பரோட்டா, மீ கோரெங், பிரியாணி போன்ற உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் இங்கு விரும்பி உண்டு மகிழ்கின்றனர். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இக்கடை திறந்திருக்கும்.
காலை மற்றும் மதிய வேளைகளில் வியாபாரம் அதிகமாக இருக்கும். இதனுடன் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அதிகம்.
கொவிட் காலத்தில் சுமார் 30% வியாபாரம் பாதிப்படைந்தாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் அனுமதி கிடைத்ததும் வர்த்தகம் சற்று மேன்மையடைந்ததாக திரு ஷாஹுல் ஹமீது கூறினார்.
தற்பொழுது வழக்கநிலைக்கு நிலைமை திரும்பியுள்ளதையும் அவர் சுட்டினார். தமது புக்கிட் பாஞ்சாங் கடையில் இரண்டு வருடங்களுக்கு முன்பே மின் கட்டண முறையை அறிமுகப்படுத்திய அவர், புக்கிட் பாத்தோக் கடையிலும் அதனை ஓன்ற றை ஆண்டுகளுக்குத் தொடங்கினார்.
மின் கட்டண கட்டமைப்புச் செயல் முறைகள் அவரது கடைகளில் அதிகாரிகளால் சில மணி நேரத்தில் மிகவும் எளிதாக ஏற்பாடு செய்யப்பட்டதை அவர் நினுவூட்டினார்.
முன்னரே மின் கட்டணத்தை அவரது கடைகளில் துவங்கியிருந்தமையால், கொவிட் காலத்தில் அது அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது. சில்லறை கொடுத்து வாங்குதல் தவிர்க்கப்பட்டு, கைத்தொலைபேசி வழி கட்டணம் செலுத்துதல் மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவரது வாடிக்கையாளர்களில் 5 முதல் 10% உள்ள 30 முதல் 35 வயதுடையோர் அதிகம் பயன்படுத்தும் கட்டண முறையாக இது அமைந்துள்ளது.
தமது மற்ற கிளை உணவகங்களிலும் இந்த மின் கட்டண முறையை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். பல வர்த்தக நண்பர்களுக்கும் அதனை பரிந்துரைத்துள்ள திரு ஷாஹுல் ஹமீது, இந்த கட்டண முறையை பெரிதும் வரவேற்கின்றார்.
திரு காஜா மைதீன், 47, கடந்த 20 வருடமாக கிளமெண்டி வெஸ்ட் சந்தையில் உள்ள நஸ் ரீன் மீட் ஹவுஸ் என்ற இறைச்சிக் கடையை அதே இடத்தில் நடத்தி வருகின்றார். இறைச்சி மற்றும் பதப்படுத்திய உணவுகளை வியாபாரம் செய்து வருகின்றார்.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வியாபாரம் மிகவும் அதிகமாக நடக்கும் நாட்களாகும். திங்கிட்கிழமை தவிர தினமும் காலை 6 மணி மதியம் 2 மணி வரை கடை திறந்திருக்கும்.
கொவிட்-19 காலகட்டத்தில் சென்ற ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் கடையில் சுமார் 20% அதிகமான வியாபாரம் நடந்தது என்றார் திரு காஜா மைதீன். கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அவர் மின்னிலக்க கட்டண முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.
ஆயினும் பலர் அதனை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. மின்னிலக்க கட்டண செயல்முறையை அதிகாரிகள் மிக விரைவில் கடையில் ஏற்பாடு செய்துவைத்த னர் என்றார் திரு காஜா மைதீன். அவர்கள் மிகவும் பணிவன்புடனும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி, அதனை செயல்படுத்தும் முறைகளை விளக்கினர்.
மிகவும் எளிதாக, சிரமங்கள் இன்றி அதனை திரு காஜா மைதீன் கற்றுக்கொண்டு, செயல்படுத்தியுள்ளார். தமது வாடிக்கையாளர்களில் சுமார் 20% இருபது வயதுடைய இளையோர்கள் முதல் நாற்பது வயதுக்குட்பட்டோர் இந்த மின்னிலக்க கட்டண முறையை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மிகவும் எளிமையான இந்த கட்டண முறையை தாம் பெரிதும் ஆதரிப்பதாகவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் மின் கட்டண முறையினால் வாடிக்கையாளர்களுக்குத் தாம் வழங்கும் சேவையின் தரத்தை உயர்த்த முடிகிறது என்றும் அவர் கருதினார்.
சில்லறை மாற்றத் தேவையற்ற இந்த மின்கட்டண முறையை மற்ற வர்த்தகர்களுக்கும் தாம் பரிந்துரைத்துள்ளதுடன் இதன் வசதியை பெரிதும் வரவேற்றார் திரு காஜா மைதீன்.