சிங்கப்பூரில் உள்ள அங்காடி நிலை யக் கடைக்காரர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ரொக்கமில்லாக் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில், மின்னியல் கட்டண சேவை வழங்குநரான நெட்ஸ், உணவங்காடிக் கடைக்காரர்கள் கட்டண மோசடியை எதிர்த்துப் போராட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவங்காடி நிலையக் கடைக்காரர்களும் சிறிய சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்களும் பயன்படுத்தும் NETSBiz செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேம்பாட்டு அம்சங்களில் பெரிய எழுத்துகள், தெளிவாகத் தெரியும் கட்டண அறிவிப்புகள், புதிய பரிவர்த்தனைகளை அடையாளம் காட்ட வண்ணங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் என்றும் உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை எளிதில் புரிந்துகொள்ள உதவும் என்றும் கூறினார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்.
“கடைக்காரர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்தப் புதிய அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டண மோசடி என்பது அனைத்து பரிவர்த்தனைத் தளங்களிலும் உள்ளது. அவற்றுக்கு எதிராக உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்கலாம் என்பதற்கான கூடுதல் தகவல்களை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்,” என்றார் அமைச்சர்.
தற்போது ‘ஹாக்கர்ஸ் கோ டிஜிட்டல்’ திட்டத்தில் 10,000 பேர் சேர்ந்து மின்னியல் கட்டணங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் $14 மில்லியனுக்கு மேற்பட்ட மதிப்புள்ள 1.2 மில்லியனுக்கு அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைச் சுட்டிய திரு ஈஸ்வரன், “இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நான்கு மடங்கு வளர்ச்சி,” என்றும் விளக்கினார்.
‘ஹாக்கர்ஸ் கோ டிஜிட்டல்’ திட்டம், எல்லா 18,000 கடைக்காரர்களும் தேசிய மின்னியல் கட்டண முறையான SGQR திட்டத்தை ஏற்றுக்கொள்ள இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து மின்னியல் கட்டண முறையை ஏற்றுக்கொள்ளும் உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு $1,500 வரை போனஸ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 7,400 பேருக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதி பெறும் காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியாக இருந்தது. இன்னும் அதிகமானோர் இத்திட்டத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் அது இப்போது இவ்வாண்டு மே 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.