சீனப் புத்தாண்டை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் விழாக்காலத்துக்குப் பிறகு சில வாரங்கள் தொடரும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகளால் கொவிட்-19 நிலவரம் சற்று மேம்பட்டுள்ளது என்றாலும் அதனால் உடனடியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது சாத்தியமல்ல என்றும் கூறினார் கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங்.
“கிருமிப் பரவல் முறியடிக்கப்பட சில காலம் பிடிக்கும் என்பதால், சீனப் புத்தாண்டு விழாக்காலத்துக்குப் பிறகு ஒரிரு அல்லது சில வாரங்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். அப்போதும் நிலைமை சீராக, கட்டுக்குள் இருந்தால், கட்டுப்பாடுகளைச் சற்று தளர்த்துவது பற்றி பரிசீலிப்போம்,” என்று திரு வோங் ஜாலான் புசார் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற கொவிட்-19 தடுப்பூசி போடும் நிகழ்வைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒரு குடும்பத்தைக் காண எட்டு வருகையாளர்களே ஒரு நாளைக்கு வர முடியும், வீட்டை விட்டு வெளியே வரும்போதும் மற்றவர்களைச் சந்திக்க அவர்களின் வீட்டுக்குச் செல்லும்போதும் தனிநபர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன போன்றவை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளில் அடங்கும்.
இந்த விழாக்காலத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரித்தன. விதிமுறைகளை மீறும் தனிநபர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
“கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை முடிந்து புத்தாண்டு தொடங்கியபோது சமூக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தன. கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் 21 சமூக அளவிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்திய வாரத்தில் அது 3ஆக இருந்தது.
“இது எங்களுக்குக் கவலை அளித்தது. ஆக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தோம். அதிலிருந்து நிலைமை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது,” என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒத்துழைப்பு நல்கிய சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.