‘ஹெல்த்ஹப்’ கைபேசிச் செயலியில் புதிதாக ஓர் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் வாசிகள் தங்களுடைய கொவிட்-19 பரிசோதனை முடிவுகளை இப்போது அந்தச் செயலியில் பார்த்துக்கொள்ளலாம். அதோடு, தடுப்பூசி தொடர்பான தங்கள் விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
ஊசியின் வகை, ஊசி போட்டுக்கொண்ட இடம், தேதி, நேரம், அடுத்ததாக ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நாள், நேர அட்டவணை உள்ளிட்ட பலவற்றையும் அவர்கள் தெரிந்துகொள்ளலாம். கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் இப்போது குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படுகின்றன. அந்த முடிவுகளை நேரடியாகவும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்போது ஹெல்த்ஹப் செய்தியில் அந்த முடிவுகள் பதிவேற்றப்படும். அவற்றை மக்கள் பார்த்து உடனுக்குடன் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தச் செயலியை உருவாக்கி இருக்கும் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு ஆலன் கோ இது பற்றி கருத்து கூறியபோது, காகிதப் பத்திரங்கள் எளிதாக காணாமல் போய்விடலாம். ஆனால் கைபேசிச் செயலி மூலம் தகவல்களைத் தெரிவிக்கும் முறை எப்போதும் வசதியானது, பாதுகாப்பானது என்றார். ஹெல்த்ஹப் இணையவாசல் 2015ல் தொடங்கப்பட்டது. அதைப் பயன்படுத்துவோர் தங்கள் பொதுச் சுகாதார விவரங்களையும் மருத்துவர்களைப் பார்க்கும் நேரம் முதலானவற்றையும் வசதியாக தெரிந்துகொள்ள முடியும்.