மேம்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம் 2019 செப்டம்பரில் தொடங்கப்பட்டது
மேம்பட்ட மத்திய சேம நிதி (மசேநி) வீடமைப்பு மானியம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக வீடு வாங்கிய ஏறக்குறைய 15,600 பேருக்கு மொத்தம் கிட்டத்தட்ட $500 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக, நெருக்கத்தை ஊக்குவிக்கும் வீட்டு மானியம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏறத்தாழ 40,200 குடும்பங்களுக்கு $748 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி மேற்கூறப்பட்ட இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக வீடு வாங்கும் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு $80,000 வரை மேம்பட்ட மசேநி மானியம் வழங்கப்படுகிறது.
தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் புது வீடு அல்லது மறுவிற்பனை வீடு எது வாங்கினாலும், வீட்டு வகை மற்றும் இடம் எதுவாக இருந்தாலும் வீடு வாங்குவோர் இந்த மானியத்திற்குத் தகுதிபெறுவர்.
இந்த மானியத்தைப் பெற்றுக்கொண்ட 15,600 குடும்பங்களில் 7,700 குடும்பங்கள் முதன்முறையாக புது வீடு வாங்கின. அவை மொத்தம் $270 மில்லியன் மானியத்தைப் பெற்றன.
முதன்முறையாக மறுவிற்பனை வீடு வாங்கிய மேலும் 7,900 குடும்பங்கள், $226 மில்லியன் மானியத்தைப் பெற்றன.
இதுபோக, மறுவிற்பனை வீடு வாங்கி இந்த மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள மேலும் 400 குடும்பங்கள், மறுவிற்பனை பரிவர்த்தனை முடிவடைந்ததும் மானியத்தைப் பெற்றுக்கொள்ளும்.
முன்பு தேசிய வளர்ச்சி அமைச்சராக இருந்த திரு லாரன்ஸ் வோங் இந்த மேம்பட்ட மசேநி வீடமைப்பு மானியத்தை 2019ல் அறிவித்திருந்தார்.
முன்பிருந்த கூடுதல் மசேநி வீடமைப்பு மானியத்திற்கும் சிறப்பு மசேநி வீடமைப்பு மானியத்திற்கும் பதிலாக இந்த மேம்பட்ட மானியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மானியம் வழங்கும் முறையை எளிமையாக்கவும் முதன்முறையாக வீடு வாங்குவோருக்கு வீட்டு விலை கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்யவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக திரு வோங் கூறியிருந்தார்.
மேம்பட்ட மசேநி மானியத்திற்குத் தகுதிபெற வருமான வரம்பு $9,000. முன்பிருந்த இரு மானியங்களுக்கான வருமான வரம்பைவிட இது அதிகம்.
நெருக்கத்தை ஊக்குவிக்கும் வீட்டு மானியம் 2015ல் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து 40,900 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.
2015 ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடையில் கிடைக்கப்பெற்ற 121,600 மறுவிற்பனை விண்ணப்பங்களில் அவை 34 விழுக்காடாகும். அவற்றில் 40,200 குடும்பங்கள் அந்த மானியத்தைப் பெற்றன.
நெருக்கத்தை ஊக்குவிக்கும் வீட்டு மானியத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்களில் 78 விழுக்காடு குடும்பங்கள். எஞ்சியவர்கள் ஒற்றையர்கள். மானியத்தைப் பெற்றுக்கொண்ட 55 விழுக்காட்டினர் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் வீடு வாங்கினர்.